அபுதாபி சிறையில் வாடும் மகனை விடுவிக்க உத்தரவிடக் கோரி தாய் மனு

அபுதாபி சிறையில் வாடும் மகனை விடுவிக்க உத்தரவிடக் கோரி தாய் மனு
Updated on
1 min read

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த ஷகுபநாத் பீவி என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், "ஐக்கிய அரபு அமீரகத்தில் பணி யாற்றி வந்த எனது மகன் ஜமால் முகமது கடந்த 2015-ல் இந்தியாவுக்கு உளவு பார்த்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். அபுதாபி சிறையில் உள்ள அவரை கொடுமைப்படுத்துகின்றனர். ஜமால் முகமது உளவு பார்த்ததாக ஐக்கிய அரபு அமீரக நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நகலை இந்திய தூதரக அதிகாரிகளிடம் வழங்கினேன்.

எனினும், இந்தியாவுக்கு உளவுபார்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறையில் வாடும் எனது மகனை விடுவிக்க மத்திய அரசு முயற்சிக்கவில்லை. இதனால் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருந்து வருகிறார். எனவே, எனது மகனை விடுவிக்க உதவுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று ஷகுபநாத் பீவி கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார், மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in