Published : 08 Jul 2021 03:12 AM
Last Updated : 08 Jul 2021 03:12 AM

இஸ்ரோவில் உளவு பார்த்த வழக்கு; கேரள முன்னாள் போலீஸ் தலைவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க கூடாது: 2 மாலத்தீவு பெண்கள் கடும் எதிர்ப்பு

இஸ்ரோவில் உளவு பார்த்த வழக்கில் கேரள முன்னாள் போலீஸ் தலைவருக்கு முன் ஜாமீன் வழங்க, மாலத்தீவு பெண்கள் 2 பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் உளவு பார்த்ததாக கேரள விஞ்ஞானி நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட அவர், எந்தஆதாரமும் இல்லை என்றுநிரூபிக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டார். அவருக்கு நிவாரண நிதி வழங்க கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், இஸ்ரோவில் உளவு பார்த்த வழக்கில் சிலரை திட்டமிட்டு சிக்க வைத்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக கேரள முன்னாள் போலீஸ் அதிகாரி சிபி மேத்யூ உட்பட போலீஸார் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி, திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் சிபி மேத்யூ மனு தாக்கல் செய்துள்ளார்.

இதற்கிடையில் இஸ்ரோவில் உளவு பார்த்த வழக்கில் மாலத்தீவை சேர்ந்த 2 பெண்களும் கைது செய்யப்பட்டு கடந்த 1994-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் தற்போது திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், ‘‘சிபி மேத்யூவுக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது. இந்த வழக்கில் போலீஸார் எங்களை வேண்டுமென்றே சிக்க வைத்து சித்ரவதை செய்தார்கள். போலீஸாரால் 3 ஆண்டுகள் கேரள சிறையில் சித்ரவதை அனுபவித்தோம். சிபி மேத்யூ மனு மீது நீதிமன்றம் முடிவு எடுப்பதற்கு முன்னர், எங்கள் தரப்பு கருத்துகளையும் கேட்க வேண்டும்’’ என்று கோரியுள்ளனர். சிபி மேத்யூவுக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என்று நம்பி நாராயணனும் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் நம்பி நாராயணனை சிக்க வைத்த குற்றச்சாட்டின் கீழ் சிபி மேத்யூ, ஐ.பி.யின் முன்னாள் துணை இயக்குநர் ஆர்.பி.ஸ்ரீகுமார் மற்றும் 16 பேர் மீது சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

மாலத்தீவை சேர்ந்த மரியம் ரஷீதா, பவுசியா ஹாசன் ஆகியோர் விசா முடிந்த பிறகும் இந்தியாவில் தங்கியிருந்ததாக கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் டைரியில் தொலைபேசி எண்கள் இருந்ததை வைத்து போலீஸார் நம்பி நாராயணன், சசிகுமரன் நாயர் ஆகியோரை கைது செய்ததாக போலீஸார் கூறினர். ஆனால், பொய் தகவல்கள் கூறி சிலரை வழக்கில் சேர்த்துள்ளதாக பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x