Last Updated : 05 Feb, 2016 08:57 AM

 

Published : 05 Feb 2016 08:57 AM
Last Updated : 05 Feb 2016 08:57 AM

ஆதர்ஷ் ஊழலில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சவான் மீது குற்ற வழக்கு தொடர சிபிஐக்கு அனுமதி

காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் நெருக்கடி



*

ஆதர்ஷ் ஊழல் வழக்கில், முன்னாள் முதல்வர் அசோக் சவான் மீது, குற்ற வழக்கு தொடர சிபிஐ.க்கு மகாராஷ்டிர ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.

கார்கில் உட்பட எல்லையில் போரின்போது உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் வீடுகள் கட்டித் தரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. மும்பை கொலாபா பகுதியில் 31 அடுக்குமாடி வீடுகள் கட்ட, ‘ஆதர்ஷ் ஹவுஸிங் சொசைட்டி’ அமைக்கப்பட்டது. இதில் பல முறைகேடுகள் நடந்தது கடந்த 2010-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய பல வீடுகள், அரசியல்வாதிகள், அவர்களுடைய உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர் பாக அப்போதைய காங்கிரஸ் முதல்வர் அசோக் சவான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து ஆதர்ஷ் ஊழல் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம், அசோக் சவான் மீது வழக்கு தொடர அப்போதைய ஆளுநர் கே.சங்கரநாராயணனிடம் அனுமதி கேட்டது. ஆனால், ஆளுநர் அனுமதி தர மறுத்துவிட்டார்.

இந்நிலையில், ஆதர்ஷ் ஊழல் வழக்கில் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், அசோக் சவான் மீது குற்ற வழக்கு தொடர மீண்டும் அனுமதி கேட்டு ஆளுநர் வித்யா சாகர் ராவிடம் சிபிஐ அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர். இது தொடர் பாக ஆளுநருக்கு மகாராஷ்டிர அமைச்சரவையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பரிந்துரை செய்தது.

அதன் அடிப்படையில், அசோக் சவான் மீது குற்ற வழக்கு தொடர, சிபிஐ.க்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று அனுமதி வழங்கினார். ஆதர்ஷ் வழக்கில் சவான் உட்பட 12 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப் பிடத்தக்கது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சவான் குற்றச்சாட்டு

ஆதர்ஷ் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அசோக் சவான், தற்போது நான்டெட் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இது பாஜக.வின் பழிவாங்கும் நடவடிக்கைதான். என் மீது வழக்கு தொடர முன்னாள் ஆளுநர் சங்கர நாராயணனிடம் சிபிஐ அனுமதி கோரியது. அப்போது சொலிட்டர் ஜெனரலிடம் ஆலோசனை நடத்திய பிறகு சிபிஐ.யின் கோரிக்கையை அவர் நிராகரித்தார்.

இப்போது மகாராஷ்டிராவில் ஆட்சி மாறி உள்ளது. ஆளுநரும் மாறி இருக்கிறார். அப்படியானால் சட்ட நிபுணரிடம் ஆலோசனை நடத்தி எடுக்கப்பட்ட (முன்னாள் ஆளுநர் சங்கரநாராயணனின்) கருத்தும், முடிவும் மாறுமா? இது திட்டமிட்ட பழி வாங்கும் செயல். என் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ.க்கு அரசியல் ரீதியாக பாஜக நெருக்கடி கொடுக்கிறது.

இவ்வாறு சவான் குற்றம் சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x