

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் மற்றும் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மத்திய அமைச்சரவையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முதன்முறையாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பாஜக நிர்வாகிகளுடன் இறுதிகட்ட ஆலோசனை நடத்தி வருகின்றனர். அமைச்சர்கள் பதவியேற்க ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
மத்திய அமைச்சரவையில் 28 காலி இடங்கள் இருக்கிறது. தற்போது அமைச்சரவையில் பிரதமர் மோடியைத் தவிர்த்து 21 கேபினட் அமைச்சர்களும், 9 இணை அமைச்சர்களும் (தனிப் பொறுப்பு), 23 இணை அமைச்சர்களும் உள்ளனர். இதுமட்டுமல்ல சில மத்திய அமைச்சர்கள் மாற்றப்பட்டு அந்த இடங்களுக்கும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனிடையே மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் மற்றும் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
தங்கள் உடல்நிலையை காரணமாக பதவி விலக விரும்புவதாக அவர்கள் ஏற்கெனவே தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. புதிய அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்பாக அவர்கள் பதவி விலகியுள்ளனர். அவர்கள் நிர்வகித்து வந்த துறைகளுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
மேலும், குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் தபாஸ்ரீ சவுத்ரி, ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, இணை அமைச்சர்கள் சஞ்சய் தாத்ரே, ராவ் சாகேப் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.