Published : 07 Jul 2021 10:26 AM
Last Updated : 07 Jul 2021 10:26 AM

‘‘வளர்ந்து வரும் இந்தியாவின் வரலாறு; சினிமா உலகின் சாதனை’’-  திலீப் குமார் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி

சினிமா உலகில் பல சாதனைகளை படைத்த திலீப் குமார் மறைவு கலை உலகத்திற்கு பேரிழப்பு என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். மும்பையின் கர் பகுதியில் இருக்கும் ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவருக்கு 98 வயதானதால், வயது மூப்பின் காரணமாக இதுபோன்ற உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவரது மனைவி சாய்ரா பானு திலீப்பின் உடல்நிலை தேறி வருவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 7) காலை 7.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி திலீப் குமார் காலமானார். திலீப் குமாரின் மறைவுக்கு இந்திய திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘‘மறைந்த நடிகர் திலீப் குமார் மறைவு என்பது ஒரு யுகத்தின் முடிவாகும். அவரை பற்றி சுருக்கமாக கூறினால் வளர்ந்து வரும் இந்தியாவின் வரலாறு’’ எனக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘சினிமா உலகில் பல சாதனைகளை படைத்த திலீப் குமார் மறைவு கலை உலகத்திற்கு பேரிழப்பு” எனத்தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில் “திலீப் குமாரின் பங்களிப்பு இந்திய சினிமாவின் அடுத்த தலைமுறையினருக்கும் நினைவில் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x