Last Updated : 07 Jul, 2021 09:57 AM

 

Published : 07 Jul 2021 09:57 AM
Last Updated : 07 Jul 2021 09:57 AM

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கொலை: வீட்டின் சலவைக்காரர் கைது

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன்குமார மங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் | படம் ஏஎன்ஐ

புதுடெல்லி


முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம், டெல்லியில் அவரின் வீட்டில் நேற்று கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய 3 பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் சேலம் தொகுதியில் 1984 முதல் 1996 வரையிலும் எம்.பியாக இருந்தார். அதன்பின் 1998 முதல் 2000 வரை திருச்சி தொகுதி எம்.பியாக இருந்தார். 1991 முதல் 1993 வரை பிரதமர் நரசிம்மராவ் அரசில் சட்டம், நீதி மற்றும் கம்பெனி விவகாரத்துறை அமைச்சராக ரங்கராஜன் குமாரமங்கலம் இருந்தார். அதன்பின் பாஜகவில் சேர்ந்த ரங்கராஜன் குமாரமங்கலம், அடல்பிஹாரி வாஜ்பாய் அரசில் 1998 முதல் 2000 வரை மின்துறை அமைச்சராக இருந்தார் , 2000ம் ஆண்டு, ஆகஸ்ட் 23ம் தேதி அவர் காலமானார்.

ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம்(வயது67), டெல்லியில் உள்ள ஆனந்த்விஹார் பகுதியில் வசித்துவந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டுக்கு வந்த சலவை செய்யும் தொழிலாளி உள்ளிட்ட 3 பேர் கிட்டி குமாரமங்கலத்தின் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது, அவரைக் கொலை செய்துள்ளனர்.

கொலை நடந்த வீட்டில் போலஸீார் ஆய்வு செய்த காட்சி

இது குறித்து டெல்லி தென்மேற்கு போலீஸ் துணை ஆணையர் இன்கித் பிரதாப் சிங் கூறியதாவது:
கிட்டி குமாரமங்கலம் நேற்று வீட்டில் இருந்தபோது இரவு 9மணி அளவில் வீட்டுக்கு சலவை செய்யும் தொழிலாளி கதவைத் தட்டியுள்ளார். வீட்டில் வேலை செய்யும் பெண், கதவைத் திறந்துள்ளார், அப்போது வேலைக்காரப் பெண்ணைக் கீழே தள்ளிய சலவை செய்பவர், அந்த பெண்ணை ஒரு அறைக்குள் இழுத்துச் சென்று அடைத்துள்ளார். அவரிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் முயன்றும், சலவைக்காரருடன் வந்தத 2 பேர் அந்தப் பெண்ணை தாக்கி அறைக்குள் அடைத்தனர்.

சலவைத் தொழிலாளியுடன் வந்த 2 பேர் சேர்ந்து, கிட்டி குமாரமங்கலம் இருக்கும் அறைக்குள் சென்று அவரின் முகத்தில் தலையனையை வைத்து அழுத்தி கொலை செய்துள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாக வீ்ட்டில் துணிகளை சலவை செய்யும் பணியில் அந்த தொழிலாளி இருந்ததால், அவரை எளிதாக வேலைக்கார பெண் உள்ளே அனுமதித்துள்ளார். அதன்பின் வேலைக்காரப் பெண் சத்தம் போட்டு, அக்கம்பத்தினரை அழைத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இரவு 11 மணிக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்து அந்த இடத்துக்குச் சென்றனர். கொலை நடந்த இடத்தில் பல சூட்கேஸ்கள் உடைத்து திறக்கப்பட்டிருந்தன என்பதால் கொள்ளை முயற்சி நடந்திருக்கலாம் எனசந்தேகிக்கிறோம்.

இந்த சம்பவத்தில் வீ்ட்டில் பணியாற்றிய சலவைத் தொழிலாளி ராஜு(வயது24) என்பதை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் வசந்த் விஹார் பகுதியி்ல் உள்ள பான்வார் சிங் கேம்ப் பகுதியைச் சேர்ந்தவர். அவரிடம் நடத்திய விசாரணையில் இன்னும் இருவருக்கு தொடர்புள்ளதாகவும், அவர்களின் பெயரையும் தெரிவித்துள்ளார். அந்த இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடி வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

வாழ்க்கை விவரம்:

ரங்கராஜன் குமாரமங்கலம், கிட்டி குமாரமங்கலத்துக்கு ஒரு மகன், ஒருமகள் உள்ளனர். மகள் ருச்சிரா குமாரமங்கலம்.

மகன் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் தற்போது காங்கிரஸ் கட்சியில் செயல்தலைவராக உள்ளார். 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியிலும், 2021, சட்டப்பேரவைத் தேர்தலில் ஓமலூர் தொகுதியிலும் போட்டியி்ட்டு மோகன் குமாரமங்கலம் தோல்வி அடைந்தார்.

மறைந்த மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் சகோதரி லலிதா குமாரமங்கலம். தற்போது பாஜகவில் உள்ள லலிதா குமாரமங்கலம், முன்னாள் தேசியச் செயலாளராக இருந்தார், தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த மத்திய அமைச்சர் ரங்கராஜன்குமார மங்கலத்தின் தாத்தா பரமசிவ சுப்பராயன், பிரிக்கப்படாத சென்னை மாகாணத்தின் முதல்வராக 1925 முதல் 1930ம் ஆண்டுவரை இருந்தவர். ரங்கராஜன்குமார மங்கலத்தின் தந்தை மோகன் குமாரமங்கலம், ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவராக இருந்து பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x