Published : 07 Jul 2021 09:14 AM
Last Updated : 07 Jul 2021 09:14 AM

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ஜூலை 9-ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு

புதுடெல்லி

மேற்கு கடலோர பகுதியில் ஜூலை 9-ம் தேதி முதல் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைவதால் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பரவலாக மழை பெய்யும் என தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் தெரிவித்துள்ளதாவது:

அரபிக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவ காற்று வலுவடைவதன் காரணமாக, மேற்கு கடலோர பகுதியில் ஜூலை 9-ம் தேதி முதல், மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொங்கன் மற்றும் கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் மாஹே கடலோர பகுதிகளில் ஜூலை 9-ம் தேதி முதல் பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் தீவிர கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அதேநேரத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் ஏற்படுவதால், வடகிழக்கு பகுதியான அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா மற்றும் நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய இடங்களில் ஜூலை 9ம் தேதி முதல் மழையின் தீவிரம் குறைய வாய்ப்புள்ளது.

வங்காள விரிகுடாவில் இருந்து கிழக்கு திசையில் இருந்து வீசும் ஈரப்பதத்துடன் கூடிய காற்று, ஜூலை 8-ம் தேதியிலிருந்து கிழக்கு இந்தியாவுக்கு படிப்படியாக முன்னேற வாய்ப்புள்ளது. இது ஜூலை 10-ம் தேதிக்குள் பஞ்சாப் மற்றும் வடக்கு ஹரியாணாவுக்கு பரவ வாய்ப்புள்ளது.

தென்மேற்கு பருவ காற்று மேற்கு உத்தரப் பிரதேசம், பஞ்சாப்பின் சில பகுதிகள், ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் டெல்லிக்கு ஜூலை 10-ம் தேதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக மத்திய இந்தியா பகுதியில் மத்தியப் பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஜூலை 8-ம் தேதி தீவிர கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடமேற்கு இந்தியாவில் ஜூலை 9-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்யும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். உத்தராகண்ட்டில் 8-ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இமாச்சல் பிரதேசம், மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ஜூலை 9-ம் தேதியில் இருந்தும், கிழக்கு ராஜஸ்தானில் ஜூலை 10-ம் தேதியில் இருந்தும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x