Last Updated : 06 Jul, 2021 06:02 PM

 

Published : 06 Jul 2021 06:02 PM
Last Updated : 06 Jul 2021 06:02 PM

மனநலக் காப்பகத்தில் இருப்போருக்கு கரோனா பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கோப்புப் படம்.

புதுடெல்லி

மனநலக் காப்பகத்தில் இருப்போருக்கும் கரோனா பரிசோதனை செய்து, அவர்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் கவுரவ் பன்சால் தொடர்ந்த பொதுநல மனுவில், “ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் நாடு முழுவதும் பல்வேறு மனநலக் காப்பகங்களில் சிகிச்சை முடிந்து குணமடைந்த நிலையில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வெளியே அனுப்பப்படாமல் இருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் மனநலக் காப்பகத்தில் இருப்பவர்களைப் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு மாற்றும் நடவடிக்கையும் நடக்கிறது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காப்பகத்தில் இருப்போருக்கு மறுவாழ்வு அளிக்கவும், அவர்கள் குணமடைந்துவிட்டால் அவர்களின் இல்லத்துக்கு அனுப்பவும் உரிய வழிகாட்டல்களை உருவாக்க 2019-ம் ஆண்டு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கவுரவ் பன்சால், மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மாதவி திவான் ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது நீதிபதிகள் அமர்வு கூறுகையில், “மகாராஷ்டிராவில் அரசு மனநலக் காப்பகத்தில் இருப்போரைப் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு மாற்றுவது நிறுத்தப்பட வேண்டும். இது மனநல சுகாதாரச் சட்டத்துக்கே விரோதமானது. இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது.

ஆதலால், அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், மனநலக் காப்பகத்தில் எத்தனை பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள், எத்தனை பேர் குணமடைந்த பின்பும் தங்கியுள்ளார்கள், எத்தனை பேருக்கு இன்னும் சிகிச்சை தேவைப்படுகிறது என்பதை அறிக்கையாக அளிக்க வேண்டும். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும், அடுத்த 3 வாரத்தில் இந்த வழக்கைப் பட்டியலிடும் பணி தொடங்கும்’’ எனத் தெரிவித்தது.

அப்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மாதவி திவான் கூறுகையில், “பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புள்ளிவிவரங்களைப் பெறுவதில் சிக்கல் இருக்கிறது. வரும் 12-ம் தேதி நடக்கும் ஆன்லைன் கூட்டத்தில் காப்பகத்தில் எத்தனை பேர் குணமடைந்த நிலையில் இருக்கிறார்கள், சிகிச்சையில் இருப்போர், சிகிச்சை தேவைப்படுவோர் குறித்த பட்டியல் கேட்டுத் தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “வரும் 12-ம் தேதி நடக்கும் கூட்டத்தில் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களும் தங்களின் பிரதிநிதிகளைப் பங்கேற்க உத்தரவிட வேண்டும். இது மிகவும் தீவிரமானது. குணமடைந்த நிலையில் இருப்பவர்களைக் கூட அவர்களின் குடும்பத்தினர் ஏற்க மறுக்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.

காப்பகத்தில் இருப்போருக்கு உரிய கரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும், அவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். கூட்டத்தில் பேசப்பட்ட விவகாரம் குறித்து அறிக்கையும் தாக்கல் செய்யப்பட வேண்டும். மகாராஷ்டிர அரசு மனநலக் காப்பகத்தில் இருப்போரைப் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு மாற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த வழக்கை வரும் 27-ம் தேதி விசாரிக்கிறோம்” என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x