Published : 06 Jul 2021 01:50 PM
Last Updated : 06 Jul 2021 01:50 PM

இந்த வார இறுதிக்குள் மத்திய அமைச்சரவை மாற்றம்: யார் யாருக்கு வாய்ப்பு?

புதுடெல்லி

மத்திய அமைச்சரவை மாற்றம் இந்த வார இறுதிக்குள் நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் யார் யார் புதிய அமைச்சராகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை பாஜக நிர்வாகிகளுடன் இறுதிகட்ட ஆலோசனை நடத்துகிறார். இந்த நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி விரைந்துள்ளனர். இதனால் எந்தநேரமும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது. புதிய அமைச்சரவையில் இடம் பெறக்கூடியவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பிஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் சார்பில் யாருக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஒரு அமைச்சர் பதவி தர பாஜக முன்வந்தபோது அதனை ஏற்க அந்தக் கட்சி மறுத்து விட்டது. எனவே தற்போது ஐக்கிய ஜனதாதளத்துக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக என்று கூறப்படுகிறது.

அக்கட்சியின் மூத்த தலைவர்கள் லாலன் சிங், ராம்நாத் தாக்கூர், சந்தோஷ் குஷ்வா ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

இதனைத் தவிர பாஜக சார்பில் மூத்த தலைவர்கள் சிலர் அமைச்சர்களாக்கப்படலாம் எனத் தெரிகிறது. மகாராஷ்டிராவில் இருந்து நாராயண் ரானே, பிஹாரில் இருந்து சுஷில் குமார் மோடி, குஜராத் மற்றும் பிஹார் பாஜக பொறுப்பாளரான பூபேந்திர யாதவ் ஆகியோர் பெயர்களும் அமைச்சர் போட்டியில் உள்ளன.

அடுத்த ஆண்டு உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் அங்கு கட்சியை பலப்படுத்தும் பொருட்டு அம்மாநில பாஜக எம்.பி.க்களான வருண் காந்தி, ராம்சங்கர் கத்திரியா, அனில் ஜெயின், பகுகுணா ஜோஷி, ஷாபர் இஸ்லாம் ஆகியோர் பெயர்கள் பரிசீலினை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. அங்கு கூட்டணிக் கட்சியான அப்னா தளத்தின் அனுபிரியா படேலுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம்.
காங்கிரஸில் இருந்து விலகிபாஜகவில் இணைந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் அமைச்சர்பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது.

அண்மையில் நடந்து முடிந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாத நிலையில் அங்கும் மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

மேற்கு வங்கத்தின் பாஜக தலைவர் திலீப் கோஷுக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெகநாத் சர்க்கார், சாந்து தாக்கூர், நிதித் பிரமாணிக் ஆகியோர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.

இதனைத் தவிர கர்நாடகாவில் இருந்து பிரதாப் சிம்ஹா, ஹரியாணாவின் பிஜேந்திர சிங், ராஜஸ்தானின் ராகுல் கஷ்வன், ஒடிசாவின் அஸ்வின் வைஷ்ணவ், மகாராஷ்ராவில் பூனம் மகாஜன் அல்லது பிரிதம் முண்டே, டெல்லியில் இருந்து பர்வேஷ் வர்மா அல்லது மீனாட்சி லெஹி ஆகியோர் பெயர்களையும் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x