Published : 06 Jul 2021 10:29 AM
Last Updated : 06 Jul 2021 10:29 AM

ரயில்வேயில் வேலைவாய்ப்பு; கரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வு: புதிய தேதி அறிவிப்பு

புதுடெல்லி

தொழில்நுட்பம் சாராத பிரிவுகளுக்கான ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட ரயில்வே தேர்வுகள் 2021 ஜூலை 23-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளதாவது:

கோவிட்-19 காரணமாக அமல்படுத்தப்பட்ட கடுமையான விதிமுறைகளுக்கு இடையே, தொழில்நுட்பம் சாராத பிரபல பிரிவுகளில் காலியாக உள்ள 35,281 பணியிடங்களுக்கான (அறிவிப்பு எண்: 01/2019) முதல் சுற்று கணினி சார்ந்த தேர்வுக்கான ஆறு கட்டங்கள் 2020 டிசம்பர் 28 முதல் 2021 ஏப்ரல் 8 வரை சுமார் 1.23 கோடி தேர்வர்களுக்கு நடத்தப்பட்டன.

மேலும், எஞ்சியுள்ள 2.78 லட்சம் தேர்வர்களுக்கான ஏழாவது கட்ட கணினி சார்ந்த தேர்வு நாடு முழுவதும் ஏற்பட்ட கரோனாவின் இரண்டாம் அலை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2021 ஜூலை 23, 24, 26 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடத்துவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. இதோடு கணினி சார்ந்த தேர்வின் முதல் கட்டம் அனைத்து தேர்வர்களுக்கும் நிறைவடையும்.

சமூக இடைவெளி உள்ளிட்ட கடுமையான கோவிட் விதிமுறைகளை பின்பற்றி தேர்வு மையங்களின் கொள்ளளவில் 50 சதவீதத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ள 76 நகரங்களில் இருக்கும் 260 மையங்களில் இந்த தேர்வு நடைபெறும். பெரும்பாலான தேர்வர்களுக்கு அவர்களது சொந்த மாநிலங்களிலேயே மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஒரு வேளை அவர்களது சொந்த மாநிலத்தில் மையத்தை ஒதுக்கீடு செய்ய முடியாத பட்சத்தில் அருகில் உள்ள மாநிலத்தில் உள்ள ரயில் வசதியுடன் கூடிய மையம் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கரோனா தொடர்பான வழிகாட்டுதல்களை தேர்வர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அனுமதிக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். முகக் கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே மையத்துக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து நேரங்களிலும் அவர்கள் முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x