Published : 06 Jul 2021 03:12 AM
Last Updated : 06 Jul 2021 03:12 AM

ஸ்ரீசைலம் சிவன் கோயில் மீது 3 நாட்களாக பறந்த ட்ரோன்: பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு

கர்னூல்

ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலம் சிவன்கோயில் மீது தொடர்ந்து 3 நாட்களாக ட்ரோன் கேமரா பறந்ததால் இக்கோயிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலத்தில் தாயார் பிரமராம்பிகை சமேத மல்லிகார்ஜுனர் சிவன் கோயில் உள்ளது. கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள இக்கோயில், அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் ஆகியோர் பாடிய திருத்தலம் ஆகும். பிரசித்தி பெற்ற சைவ திருத்தலமாக விளங்கும் இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக இரவில் கோயில் கோபுரம் மீதும், மாட வீதிகளிலும் ரகசியமாக ட்ரோன் கேமரா ஒன்று பறப்பதை கண்ட பக்தர்கள், அதனை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து தேவஸ்தான நிர்வாகத்திடம் அளித்தனர். இதையடுத்து கர்னூல் மாவட்ட போலீஸ் ஆணையரிடம் ேதவஸ்தான நிர்வாகத்தினர் புகார் அளித் தனர். இதன்பேரில் ஸ்ரீசைலம் சிவன் கோயில் சத்திரங்களில் தங்கியுள்ள அனைவரிடமும் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். மேலும் கர்னூலில் உள்ள லாட்ஜ்களில் ஆய்வு நடத்தினர்.

ஸ்ரீசைலம் கோயிலுக்கு ஏற்கெனவே தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் தற்போது தீவிரவாதிகள் யாரேனும் இப்பகுதியில் பதுங்கியுள்ளனரா என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீஸார் தீவிர சோதனையிட்டு வருகின்றனர். ஸ்ரீசைலம் கோயிலில் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x