

கோவின் இணையதளம் இந்தியாவின் டிஜிட்டல் முன்னெடுப்பின் மணிமகுடம் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றை எதிர்த்துப் போராட, உலகிற்கு டிஜிட்டல் பொது நன்மையாக கோவின் தளத்தை இந்தியா வழங்கியுள்ளது.
இந்நிலையில், கோவின் உலகளாவிய மாநாட்டில் சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று உரையாற்றினார்.
அப்போது அவர், கோவின் இணையதளம் இந்தியாவின் டிஜிட்டல் முன்னெடுப்பின் மணிமகுடம். இது இந்தியாவில் தடுப்பூசித் திட்டத்தின் முதுகெலும்பாக இருந்திருக்கிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோருக்கு உதவுவதோடு அதனை வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்த கோவின் இணையதளம் உதவியிருக்கிறது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பொதுமக்களின் பதிவு, சான்றிதழ் என அனைத்தையும் திறம்பட ஒருங்கிணைக்க கோவின் இணையதளம் உதவியுள்ளது.
இந்த இணையதளத்தில் இந்தியாவின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் மக்கள் பதிவு செய்தனர். இதனால் தடுப்பூசியின் தேவையை மிகவும் நுட்பமாக அறிந்துகொள்ள முடிந்தது.
கரோனா பெருந்தொற்று உண்மையில் மக்களை மனங்களால் இணைத்துள்ளது. சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினாலும் கூட கரோனாவுக்கு எதிரான போரில் தூரத்தில் இருந்தலும் கூட ஒருவருடன் ஒருவர் இணைந்து போராட கோவின் இணையதளம் வழிவகுத்துள்ளது.
இந்தியா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கி 6 மாதங்களே ஆகியுள்ள நிலையில், இதுவரை 35 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கிறது. டிசம்பர் 2021க்குள் தடுப்பூசி பெற தகுதியுடைய ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தியிருப்போம்
கோவின் தளமானது, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வெற்றியைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. இன்னும் நாம் நிறைய சாதனைகளை செய்யவிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.