Published : 05 Jul 2021 12:29 PM
Last Updated : 05 Jul 2021 12:29 PM

‘‘நாங்கள் இந்தியா- பாகிஸ்தான் அல்ல; பாஜகவுடன் நட்பாகவே இருக்கிறோம்’’ - சிவசேனா பதில்

மும்பை

சிவசேனாவும், பாஜகவும் பாகிஸ்தானும், இந்தியாவும் போல அல்ல, இருகட்சிகளுக்கும் உள்ள நட்பு உறுதியாக உள்ளது என சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் முதல்வர் பதவி யாருக்கு என்ற போட்டியில் பாஜக, சிவசேனா கூட்டணி முறிந்தது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்துப் பேசினார். இந்த சூழ்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியக் குடியரசு கட்சியின் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே கூறும்போது, " மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா இடையேயான உறவை புதுப்பிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸிடம் பேசியுள்ளேன். மேலும் பிரதமர் மோடியுடனான சந்திப்பிலும் இதுகுறித்து விவாதிக்க உள்ளேன்" என்றார்.

இதனைத் தொடர்ந்து பட்னாவிஸ் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதனால் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் உருவாகிறதா என்ற கேள்வி எழுந்தது.

இதுபற்றி பட்னாவிஸ் கூறியதாவது:
"கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் இணைந்து போட்டியிட்டன. ஆனால் தேர்தல்களுக்குப் பிறகு, நாங்கள் யாருக்கு எதிராக போட்டியிட்டோமோ அந்த நபர்களுடன் கைகோர்த்து சிவசேனா ஆட்சியமைத்தது.

அரசியலில் நடைமுறையில் உள்ள சூழ்நிலைகளின்படி முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சிவசேனா பாஜகவின் எதிரி அல்ல. நண்பர் தான். சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும். அரசியலில் நடக்காது என்று எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். வழக்கமாக சிவசேனாவை கடுமையாக விமர்சித்து வரும் பட்னாவிஸ் திடீரென புகழ்ந்து பேசியுள்ளதால் மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக- சிவசேனா கூட்டணி அமைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பட்னாவிஸ் கருத்துக்கு சிவசேனாவும் பதிலளித்துள்ளது. இதுகுறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கூறியதாவது:

சிவசேனாவும், பாஜகவும் பாகிஸ்தானும், இந்தியாவும் போல அல்ல. ஆமிர்கான்- கிரண் ராவ் போல தான். பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் அரசியல் வழி வேறுபட்டு இருக்கலாம். ஆனால் இருகட்சிகளுக்கும் உள்ள நட்பு உறுதியாக உள்ளது. எனவே எங்கள் இருகட்சிகளையும் எதிரிகளாக எண்ண வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x