

*
மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு 2016-17ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மக்களவை யில் நேற்று தாக்கல் செய்தார்.
இதில் பயணிகள், சரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. சென்னையில் கார் உள்ளிட்ட ஆட்டோமொபைல் பொருட்களின் போக்குவரத்துக்காக புதிய முனையம் அமைக்கப்பட உள்ளது.
மக்களவையில் அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று காலை ரயில்வே பட்ஜெட்டை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சர்வதேச பொருளாதார தேக்க நிலை, 7-வது ஊதிய கமிஷன் பரிந்து ரைகள் ரயில்வேக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளன. எனினும் ரயில்வே ஊழியர்களின் துணை யுடன் சோதனை காலத்திலும் சாதனைகளை படைத்து வருகி றோம்.
நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக் கப்படுகிறது. அதன்படி அடுத்த 4 ஆண்டுகளில் நிலுவை திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
ரயில்வே திட்டங்களுக்கு பெரும் முதலீடுகள் தேவைப்படுகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் 1.5 லட்சம் கோடி முதலீடு செய்ய எல்.ஐ.சி. நிறுவனம் முன்வந் துள்ளது.
நடப்பாண்டில் 2,500 கி.மீ. தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் 2,800 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்படும். கடந்த 6 ஆண்டுகளாக நாளொன் றுக்கு சராசரியாக 4.3 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே ரயில் பாதை அமைக்கப்பட்டு வந்தது. தற்போது நாளொன்றுக்கு 7 கி.மீ. தொலைவுக்கு பாதை அமைக்கப்படுகிறது. வரும் 2017-18-ல் 13 கி.மீ. ஆகவும் 2018-19-ல் 19 கி.மீ. ஆகவும் அதிகரிக்கப்படும். இதன்மூலம் முறையே 9 கோடி மற்றும் 14 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ரயில் பாதை மின்மயம்
சில ஆண்டுகளிலேயே நாடு முழுவதும் ரயில் பாதைகளை மின்மயமாக்க திட்டமிட்டுள் ளோம். நடப்பாண்டில் 1,600 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் 2,000 கி.மீ. தொலைவு மின்மயமாக்கப் படும்.
சென்னை-டெல்லி வழித்தடம்
வடக்கையும் தெற்கையும் இணைக்க டெல்லி-சென்னை, கிழக் கையும் மேற்கையும் இணைக்க காரக்பூர்-மும்பை, கிழக்கு கடற்கரை பகுதியை இணைக்க காரக்பூர்-விஜயவாடா வழித்தடங்களில் சரக்குப் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டங்கள் அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத் தப்படும்.
ஒரு லட்சம் புகார்கள்
மருத்துவ உதவி, பாதுகாப்பு, ரயில் பெட்டி, ரயில் நிலையங்களின் அசுத்தம் தொடர்பாக, ரயில்வே உதவி மையத்துக்கு நாளொன் றுக்கு ஒரு லட்சம் அழைப்புகள் வருகின்றன. இவை அனைத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படு கிறது.
நடப்பு நிதியாண்டில் ரயில் பெட்டிகளில் 17 ஆயிரம் பயோ கழிப்பறைகளும் 475 ரயில் நிலை யங்களில் பயோ கழிப்பறைகளும் அமைக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்காக ரயில் பெட்டிகளில் பிரெய்லி எழுத்துகள் பொறிக்கப்பட்டு வருகின்றன. வீல் சேர்களையும் அவர்கள் ஆல்லைனில் முன்பதிவு செய்யலாம்.
ஒரு ரயிலில் 50 சதவீத கீழ் படுக்கை இருக்கைகள் முதியோருக்காக ஒதுக்கப்படும். அவர்களுக்காக ரயில் நிலையங் களில் நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகளும் அமைக்கப்படும்.
ரயில் டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33 சதவீத உள்ஒதுக் கீடு வழங்கப்படும். பத்திரிகையாளர் களுக்கு இணையதள முன்பதி வில் சலுகை அளிக்கப்படும்.
சுற்றுலா ரயில் நிலையங்கள்
நாகப்பட்டினம், வேளாங் கண்ணி, திருப்பதி, அஜ்மீர், அமிர்தசரஸ், பிஹார்ஷெரீப், செங்கனூர், துவாரகா, கயா, ஹரித்வார், மதுரா, நாசிக், பாலி, பிரசாந்த், புரி, வாரணாசி உள்ளிட்ட ஆன்மிக சுற்றுலா தலங்களின் ரயில் நிலையங்கள் அழகுபடுத்தப்படும்.
ரயில் முனையங்கள்
கடந்த பட்ஜெட்டில் நாடு முழுவதும் (சென்னை உட்பட) 10 இடங்களில் ரயில்வே முனையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. அரசு, தனியார் பங்களிப்பில் இத்திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு எங்களோடு இணைந்து செயல்பட முன்வர வேண்டும்.
ரயில்வே போர்ட்டர்களுக்கு புதிய சீருடை வழங்கப்படும். குழு காப்பீடு வசதி செய்து தரப்படும். அவர்கள் இனிமேல் ‘சகாயக்’ என்று அழைக்கப்படு வார்கள்.
புல்லட் ரயில் திட்டம்
அகமதாபாத்- மும்பை இடையே அதிவேக ரயில் பாதை (புல்லட் ரயில்) ஜப்பான் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை புறநகர் சேவை
டெல்லி, மும்பை, கொல்கத்தா புறநகர் ரயில் சேவைகள் மேம்படுத் தப்படும். மேலும் சென்னை, ஹைதராபாத், அகமதாபாத், பெங்களூரு ஆகிய பெருநகரங் களில் புறநகர் ரயில் சேவையை மேம் படுத்த தமிழகம், தெலங்கானா, குஜராத், கர்நாடக மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளோம்.
சென்னையில் ‘ஆட்டோ ஹப்’
இந்தியாவின் முதல் ரயில்வே ‘ஆட்டோ ஹப்’ சென்னையில் அமைக்கப்படும். இதன் மூலம் கார் உள்ளிட்ட ஆட்டோமொபைல் பொருட்களின் போக்குவரத்து அதிகரிக்கும்.
ரயில் நிலையங்களில் உள்ள காலி இடங்கள் வணிகரீதியில் பயன்படுத்தப்படும். அதன்மூலம் அந்தந்த ரயில் நிலையங்களின் தரம் மேம்படுத்தப்படும்.
ரயில் மேம்பாட்டு ஆணையம் அமைப்பது குறித்து விரைவில் வரைவு மசோதா தயாரிக்கப்படும்.
மின்சாரத்தை சேமிக்க அனைத்து ரயில் நிலையங்களிலும் அடுத்த 3 ஆண்டுகளில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்படும். ரயில்வேக்கு சொந்தமான 2,000 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப் படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.