Published : 05 Jul 2021 03:12 AM
Last Updated : 05 Jul 2021 03:12 AM

100 நாட்களில் 25,000 வெளிநாட்டினரிடம் ரூ.5 கோடி அபகரித்த இளைஞர் கைது

அகமதாபாத்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ஹர்ஷ்வர்தன் பார்மர் என்ற 21 வயது இளைஞர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இணைய மோசடியில் ஈடுபட்டுள்ளார். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு விவரங்கள் மூலம் மோசடி செய்து பணம் சம்பாதிக்கும் வித்தையை பாகிஸ்தானைச் சேர்ந்த சியா முஸ்தபா என்பவரிடம் கற்றுக் கொண்டிருக்கிறார்.

இதையடுத்து ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர் ஒருவரின் உதவி மூலம் பல வெளிநாட்டினரின் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாக ஆன்லைனில் பொருட்களை வாங்கி, அவற்றைப் பணத்துக்கு விற்றுள்ளார். டார்க் வெப் மூலமாக முறைகேடான நடவடிக்கைகளில் ஹர்ஷ்வர்தன் ஈடுபட்டு வருவதைக் கண்டுபிடித்த அகமதாபாத் சைபர் கிரைம் போலிஸார் அவரை கைது செய்தனர். இந்த மோசடியை விசாரணை செய்து வந்த குழுவினர் ஹர்ஷ்வர்தன் 30 குளிர்சாதன பெட்டிகளை ஆர்டர் செய்யும் போது வளைத்து பிடித்துள்ளனர்.

விசாரணையில் 100 நாட்களில் 25 ஆயிரம் வெளிநாட்டினரை ஏமாற்றியுள்ளார் என்றும் இதுவரை ரூ.5 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் பரிவர்த்தனைக்காக மொபைல் எண்ணுக்கு அனுப்பக்கூடிய ஓடிபி என்ற ரகசிய எண் முறையைச் செயல்படுத்தாத நாடுகளை அதிகமாக இலக்கு வைத்து ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x