Last Updated : 04 Jul, 2021 02:19 PM

 

Published : 04 Jul 2021 02:19 PM
Last Updated : 04 Jul 2021 02:19 PM

கரோனாவுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது: மத்திய அரசுக்கு கேஜ்ரிவால் வலியுறுத்தல்

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் | கோப்புப் படம்.

புதுடெல்லி

கரோனா வைரஸுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கிட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா முதல் அலையில் பணியில் ஈடுபட்டிருந்த 748 மருத்துவர்கள் உயிரிழந்தனர். தற்போது மெல்லக் குறைந்து வரும் கரோனா 2-வது அலையில் இதுவரை 730 மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக பிஹாரில் 115 மருத்துவர்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து டெல்லியில் 109 பேர், உத்தரப் பிரதேசத்தில் 79 பேர், மேற்கு வங்கத்தில் 62 பேர், ராஜஸ்தானில் 43 பேர், ஜார்க்கண்டில் 39 பேர், ஆந்திராவில் 38 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மருத்துவர்கள் அனைவருக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி என்பது, தற்போது கரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் பணியாளர்கள் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

இதுதான் தங்களின் குடும்பத்தினரையும், உயிரையும் கருதாமல் மக்களுக்காகப் பணியாற்றும் மருத்துவர்களுக்குச் செய்யும் உண்மையான மரியாதையாக அமையும். இதற்கு ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சி அடையும்” என்று கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x