

இந்தியாவில் தடுப்பூசி தொடர்பான வரைபடத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இதனை சுட்டிக்காட்டி இடைவெளியை நினைவில் கொள்ளுங்கள் என மத்திய அரசுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது 34 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனினும் சில மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனை குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்து இருந்தார். ஜூலை வந்து விட்டது, தடுப்பூசி வரவில்லை, எங்கே தடுப்பூசி’’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ‘‘ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி தகவல்கள் குறித்து நான் ஏற்கெனவே தகவல்களை வெளியிட்டு இருந்தேன். ராகுல் காந்திக்கு என்ன தான் பிரச்னை?
அவர் அந்த தரவுகளை பார்க்கவில்லையா? ஆணவத்துக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது. காங்கிரஸ் கட்சி தங்கள் தலைமையை மாற்றுவது குறித்து ஆலோசிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் ராகுல் காந்திக்கு பதிலளித்துள்ளார்.
இந்தநிலையில் ராகுல்காந்தி இன்று தடுப்பூசி விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் பதிவிட்டுள்ளார். அதில் எங்கே தடுப்பூசி என்ற தலைப்பில் தடுப்பூசி முழுமையான டிராக்கர் என்ற தலைப்பில் இந்தியாவில் தடுப்பூசி தொடர்பான வரைபடத்தை வெளியிட்டு உள்ளார்.
அதில் கரோனா 3வது அலையை தவிர்க்க கரோனா தடுப்பூசி ஒவ்வொரு நாளும் 69 லட்சம் போட வேண்டும் எனவும் ஆனால் தற்போது 50.8 லட்சம் தடுப்பூசிகளே போடப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டுக்குமான இடைவெளி 27 சதவீதம் உள்ளது. இதனை சுட்டிக்காட்டி இடைவெளியை நினைவில் கொள்ளுங்கள் என ட்விட் செய்து உள்ளார்.