Published : 03 Jul 2021 03:12 AM
Last Updated : 03 Jul 2021 03:12 AM
கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள 6 மாநிலங்களில் ஆய்வு நடத்த மத்திய சுகாதாரத் துறை குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவத் தொடங்கியது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்தது.
மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்தது. அதேநேரத்தில், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், நாட்டில் 6 மாநிலங்களில் மட்டும் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கேரளா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர், மணிப்பூர் ஆகிய 6 மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த மாநிலங்களுக்கு மத்தியக் குழுவை நடத்தி ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவு செய்தது.
அதன்படி, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு 6 மத்தியக் குழுவினர் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். தலா 2 பேர் கொண்ட இந்தக் குழுவில் மருத்துவர், பொது சுகாதார நிபுணர் இடம் பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தொற்று அதிகரித்துள்ள மாநிலங்களில் மத்தியக் குழுவினர் உடனடியாகஆய்வு மேற்கொள்வர். கரோனா பரிசோதனை, சிகிச்சை முறைகள், தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்தக் குழு கண்காணிக்கும். மருத்துவமனைகளில் படுக்கைகள் இருப்பு, ஆம்புலன்ஸ், வென்டிலேட்டர், மருத்துவ ஆக்ஸிஜன் இருப்பு குறித்து ஆய்வு செய்வதுடன், மாநில அரசுக்கு தேவையான அறிவுரைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளையும் இந்தக் குழுவினர் வழங்குவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT