Last Updated : 02 Jul, 2021 03:12 AM

 

Published : 02 Jul 2021 03:12 AM
Last Updated : 02 Jul 2021 03:12 AM

தமிழகத்துக்கு ஜூன் மாதத்தில் வழங்க வேண்டிய அளவில் கர்நாடகா 2.329 டிஎம்சி காவிரி நீரை குறைவாக வழங்கியதாக முறையீடு: உடனடியாக தண்ணீரை திறந்துவிட ஒழுங்காற்று குழு அறிவுறுத்தல்

பெங்களூரு

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரில் 2.329 டிஎம்சி நீரை கர்நாடகா குறைவாக வழங்கியுள்ளது என காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழக அரசு முறையிட்டுள்ளது.

கடந்த 25-ம் தேதி நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி நீரும் ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி நீரும் தமிழகத்துக்கு வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து கடந்த வாரம் தினமும் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டது. ஆனால், கடந்த 3 நாட்களாக தினமும் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை மட்டுமே திறந்துவிடுகிறது.

இந்நிலையில், காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம், அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் நேற்று முன்தினம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில் குழு உறுப் பினர் எஸ்.ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். இதேபோல கர்நாடகா, புதுச்சேரி, கேரள மாநில உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

தமிழகம், கர்நாடகா, கேரள மாநில உறுப்பினர்கள், தங்கள் மாநிலங்களில் உள்ள அணை களின் நீர்மட்ட அளவை தெரி வித்தனர். அப்போது கர்நாடகா தரப்பில், “நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவின் அளவு குறைந்ததால் அணைகளுக்கு போதிய நீர்வரத்து இல்லை. அணைகளில் நீர்மட்டம் கடந்த ஆண்டைக்காட்டிலும் குறை வாக இருப்பதால் இதுவரை கர்நாடக விவசாயிகளுக்கு பாசனத் துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட வில்லை” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழக உறுப் பினர் ராமமூர்த்தி பேசியதாவது:

காவிரி நதி நீர் பங்கீட்டு வழக் கின் இறுதித் தீர்ப்பில் ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு கர்நாடகா வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜூன் 1-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கர்நாடகா 8.271 டிஎம்சி தண்ணீரை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு 5.942 டிஎம்சி நீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளதாக பிலிகுண்டுலு அளவை நிலைய புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதாவது, ஜூன் மாதத்தில் 2.329 டிஎம்சி நீரை குறைவாக வழங்கியுள்ளது.

தமிழகத்துக்கான நீர் பங் கீட்டை கோரும் போதெல்லாம் கர்நாடகா மழைப் பொழிவின் அளவு குறைந்தது பற்றியும், மழைக்காலங் களில் திறக்கப்படும் உபரி நீரின் அளவையும் தெரிவிக்கிறது. இந்த விதமான போக்கு தமிழகம் தனது உரிமையை பெறுவதற்கு இடை யூறாக உள்ளது. எனவே, மழைக் காலங்களில் காவிரியில் திறந்து விடப்படும் உபரி நீரை முறையான கணக்கீடு செய்ய வேண்டும்.

தற்போது மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக 15 ஆயிரம் கனஅடி நீ்ரை தமிழக அரசு திறந்து விட்டுள்ளது. இந்த அளவை மேலும் அதிகரிக்க வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர். எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப் பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா உடனடி யாக வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து காவிரி ஒழுங் காற்று குழு தலைவர் நவீன்குமார் பேசும்போது, “ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரையும் ஜூலை மாதத்தில் வழங்க வேண்டிய 31.24 டிஎம்சி நீரையும் கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிட வேண்டும்” என அறிவுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x