Published : 02 Jul 2021 03:13 AM
Last Updated : 02 Jul 2021 03:13 AM

துணி ரசாயன வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்த சதி: ஹைதராபாத்தில் தீவிரவாதிகள் 2 பேர் கைது

பிஹார் மாநிலம், தர்பங்கா ரயில்நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஹைதராபாத்தில் தீவிரவாத சகோதர்கள் இருவரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

பிஹார் மாநிலம் தர்பங்கா ரயில் நிலையத்தில் கடந்த ஜூன்17-ம் தேதி பார்சல்களை இறக்கும்போது, துணிகள் அடங்கிய ஒரு பார்சலில் மெல்லிய புகை கிளம்பியது. பின்னர் அது வெடித்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இந்த வழக்கு பின்னர் என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் விசாரணையில், பார்சல்கள் மூலம் நாடு முழுவதும் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்படுத்த

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக உ.பி.யின் ஷாமிலி மாவட்டம் கைரானா பகுதியை சேர்ந்த முகமது ஹாஜி சலீம் காசிம், இவரது மகன்முகமது காஃபில் ஆகிய இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் வந்த என்ஐஏஅதிகாரிகள், ஆசிஃப் நகரில் ரெடிமேட் துணிக்கடை நடத்தி வரும் இம்ரான், நசீர் என்கிற இரு சகோதரர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் நேற்று கைது செய்தனர்.

இதையடுத்து அவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

ஹைதராபாத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தவழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் கூறும்போது, “ரெடிமேட் துணிக்கடை நடத்தி வரும்இவர்கள் இருவரும் சாதாரணமானவர்கள் அல்ல. கடந்த மாதம் 15-ம் தேதி ஹைதராபாத்தில் இருந்துதான் முகமது சுஃபியான் எனும் பெயரில் பிஹாருக்கு துணி பார்சலில் வெடிகுண்டு அனுப்பப்பட்டது. பார்சலை வாங்குபவர் பெயரும் ஒன்றாக இருந்ததால் எங்களுக்கு சந்தேகம் எழுந்தது.

சகோதரர்கள் இருவரும் உ.பி.யை சேர்ந்தவர்கள். இவர்களில் நசீர், கடந்த 2012-ம் ஆண்டே, பாகிஸ்தான் சென்று லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தீவிரவாத பயிற்சி பெற்றுள்ளார். துணி மூலம் ரசாயன வெடிகுண்டு தயாரிப்பதில் அவர் பயிற்சி பெற்றுள்ளார்.

பின்னர் ஹைதராபாத் திரும்பிய நசீர் தனது சகோதரன் இம்ரானுக்கும் இந்தப் பயிற்சியை அளித்துள்ளார். இருவரும் சேர்ந்துதயாரித்த துணி ரசாயன வெடிகுண்டை பிகார் ரயில் நிலையத்துக்கு அனுப்பினர்.

இவர்களை போல் பலர், இதுபோன்ற பயிற்சி பெற்று இந்தியா வந்திருக்கலாம் என கருதுகிறோம்” என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x