Published : 02 Jul 2021 03:13 AM
Last Updated : 02 Jul 2021 03:13 AM
காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில் ட்ரோன்களை வாங்கவும் விற்கவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஜம்மு விமானப்படை தளத்தில் கடந்த 27-ம் தேதி 6 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில் 2 பேர் காயமடைந்தனர். ஆளில்லா சிறிய ரக விமானம் (ட்ரோன்) மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், எல்லையில் உள்ள ரஜவுரி மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் குமார் ஷவன் நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவில், “சமூக விரோதிகள் சிலர் ட்ரோன்களை பயன்படுத்தி பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தவும் மனிதர்களை கொல்லவும் திட்டமிட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி ட்ரோன்களை வாங்க, விற்க, இருப்பு வைக்க, பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. ட்ரோன்கள் அல்லது அதுபோன்ற பறக்கும் சாதனங்களை வைத்திருப்போர் உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
எனினும், கண்காணிப்பு பணிகளுக்காக ட்ரோன்களை பயன்படுத்தும் அரசு அமைப்புகள் உள்ளூர் காவல் நிலையம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT