உ.பி.யில் புனித நகரங்களுக்கு இடையே கடல் விமான சேவை: மதுரா, சித்தரகுட், காசி, அலகாபாத், அயோத்திக்கு பயணம் செய்யலாம்

உ.பி.யில் புனித நகரங்களுக்கு இடையே கடல் விமான சேவை: மதுரா, சித்தரகுட், காசி, அலகாபாத், அயோத்திக்கு பயணம் செய்யலாம்
Updated on
2 min read

உத்தரபிரதேசத்தின் புனித நகரங்களுக்கு இடையே கடல் விமானச்சேவை துவங்க உள்ளது. பயணிகள் மதுரா, சித்தரகுட், காசி எனும் வாரணாசி, அலகாபாத் மற்றும் அயோத்தி நகரங்களுக்கு இதில் ஏறிப் பயணம் செய்யலாம்.

நாட்டிலேயே முதல் முறையாகக் கடல் விமானத்தின் சேவை, குஜராத்தில் துவங்கப்பட்டது. இதை கடந்த வருடம் அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்திருந்தார். சுற்றுலாபயணிகளுக்காக என இந்த கடல் விமானம், கேவடியாவிலிருந்து சபர்மதி வரை 200 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று வருகிறது.

இந்த சேவை இரண்டாவதாக உத்தரபிரதேசத்தின் புனித நகரங்களுக்கு இடையே அறிமுகப் படுத்தப்பட உள்ளது. கங்கை உள்ளிட்ட நதிகளின் மீது இந்த கடல் விமானம் பயணிக்கும்.

இந்த விமானம் கடல் அல்லது நதி நீர் மற்றும் தரையிலும் இறங்கும் அமைப்பு கொண்டது. இதற்கான ஓடுதளம் நதிநீர் அல்லது கடல் நீராகவே இருக்கும். தரையில் மட்டும் ஓடுதளத்தை அமைக்க வேண்டி இருக்கும். ஒரு விமானி உள்ளிட்ட 12 பயணிகள் இதில் ஒரே சமயத்தில் பயணம் செய்யலாம். இருக்கைகளை அகற்றினால் கடல் விமானம் சரக்கு சேவைகளுக்கும் பயன் படும். வயல்வெளிகளில் பூச்சி மருந்துகள் தெளிக்கவும் இந்த விமானம் பயன்படும்.

சுமார் 330 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் இந்த விமானம் 12,000 அடி உயரத்தில் பறக்கும். தரை அல்லது நீரில் சுமார் 300 மீட்டர் பயணித்த பின் உயரப் பறக்கும் தன்மை உடையது. மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படும் இந்த கடல் விமானத்தில் ஒரு இயந்திரம் மட்டும் பொருத்தப்பட்டுள்ளது. அயோத்தியின் சரயு நதியில் ஒரு சிறிய துறைமுகம் கட்டப்பட்டு அங்கிருந்து இந்த கடல் விமானம் சென்று வரும். இது பயணிக்கும் வழியில் எதிரில் படகுகள் எதுவும் வராத வகையில் ஒருவழிப் பாதை யாக இருக்கும்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உபி உயர் அதிகாரிகள் வட்டாரங்கள் கூறும்போது, ‘இந்த வகை விமானச் சேவைக்காக பிரதமர் நரேந்திர மோடி விரும்பி பரிந்துரைத்திருந்தார். குஜராத்தில் இதை இயக்கும் ‘இன்லேண்ட் வாட்டர்வேஸ் அத்தாரிட்டி ஆப்இந்தியா’ நிறுவனம் (ஐ.டபிள்யு.ஏ.ஐ) உபியிலும் செயல்படுத்த மத்திய அரசிற்கு விண்ணப்பித்துள்ளது. இதில் எந்த பிரச்சினையும் இல்லாத நிலையில் அதன் சேவை வரும் செப்டம்பர் முதல் துவக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் விலை மதிப்பு ரூ.25 கோடி ஆகும்’ எனத் தெரிவித்தன.

இந்த சேவை குறித்து ஆய்வு செய்ய (ஐ.டபிள்யு.ஏ.ஐ) நிறுவனத்தின் மண்டல ஆணைய ரான தீபக் அகர்வால் கடந்த வாரம் வாரணாசி வந்திருந்தார். எந்த நதிகள் வழியாக இந்த விமான சேவையை அமைப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ஏற்கெனவே இந்த புனித நகரங்களுக்கு படகு சேவைகள் துவங்கி நடைபெறுகின்றன. இக்கடல் விமானச் சேவையின் மூலம் உத்தரபிரதேசத்தில் சர்வதேச அளவில் அமைக்கப்பட்டு வரும் அயோத்தியை போல் மற்ற புனித நகரங்களும் சர்வதேச அளவிலான தரத்தில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in