Published : 30 Jun 2021 08:11 PM
Last Updated : 30 Jun 2021 08:11 PM

பஞ்சாப் அரசியல் சர்ச்சை: பிரியங்காவைத் தொடர்ந்து ராகுலையும் சந்தித்தார் சித்து

புதுடெல்லி

பஞ்சாப் அரசியல் சர்ச்சை தொடர்பாக தனது மனக்குமுறல்களை முன்வைக்கும் விதமாக நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்தித்துள்ளார்.

முன்னதாக, அவர் பிரியங்கா காந்தியை சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக ராகுல் காந்தியையும் சந்தித்திருக்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் அம்மாநில காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் வலுத்துள்ளது. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் போர்க்கொடி துாக்கியுள்ளார். சித்துவுக்கு ஆதரவாக சில காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உட்கட்சி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கட்சித் தலைவர் சோனியாகாந்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

பஞ்சாப் காங்கிரஸில் நிலவும் உள்கட்சி மோதலைத் தீர்ப்பதற்காக மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமரீந்தர் சிங், சித்து ஆகியோரை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அந்த அறிக்கையை சமர்ப்பித்தது.

அந்தக் குழுவிடம் பல்வேறு புகார்களை தெரிவித்து இருந்தநிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்து முறையிடப்போவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் சித்துவை தான் சந்திக்கவில்லை என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலையில் பிரியங்காவை சந்தித்த சித்து, மாலையில் ராகுல் காந்தியையும் சந்தித்துள்ளார். இருவரையும் சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களை அவர் தனித்தனியே வெளியிட்டுள்ளார். பிரியங்கா காந்தியுடனான சந்திப்பு 4 மணி நேரம் நடைபெற்றதாகத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x