Published : 30 Jun 2021 01:55 PM
Last Updated : 30 Jun 2021 01:55 PM

உருமாறிய கரோனா வைரஸுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் கோவாக்சின் தடுப்பூசி: அமெரிக்க ஆய்வில் தகவல்

நியூயார்க்

கோவாக்சின் தடுப்பூசி டெல்டா வகை உள்ளிட்ட மரபணு உருமாறிய கரோனா வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தற்போது 23 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்கள் போட்ட பிறகு கோவிஷீல்ட், கோவாக்சின் இரண்டுமே சிறந்த பலன்களைக் கொடுப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்களப் பணியாளர்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அதன் தாக்கம் தொடர்பாக அண்மையில் இந்தியாவில் ஆய்வு நடத்தப்பட்டபோது கோவிஷீல்ட்டில் கூடுதலான ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு தன்மையை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது. இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இதனால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளனர். இதுகுறித்த ஆய்வும் தீவிரமடைந்து வருகிறது.

இந்தநிலையில் பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி டெல்டா போன்ற மரபணு உருமாறிய கரோனா வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சுகாதார ஆய்வு நிறுவனம் (என்ஐஎச்) அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் தற்போது தெரிய வந்துள்ளன. அதன் விவரம் வருமாறு:

கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், கோவாக்சின் தடுப்பூசி கோவிட் B.1.1.7 (ஆல்பா) மற்றும் B.1.617 (டெல்டா) வகைகளின் தீவிரத்தை கட்டுப்படுத்தி அதனை செயலிழக்கச் செய்யுமு் ஆன்டிபாடிகளை உருவாக்குவது கண்டறியப்பட்டு உள்ளது.

கரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின் ஆன்டிபாடிகளை உருவாக்க நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகிறது. குறிப்பாக உருமாற்றமடைந்த கரோனா வைரஸ்களுக்கு எதிராக ஆன்டிபாடிகளை திறம்பட உருவாக்குகிறது. இது பாதுகாப்பானது மற்றும் பக்க விளைவுகள் குறைவானது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2 ம் கட்ட ஆய்வு செய்துள்ள அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் கோவாக்சின் குறித்த 3-ம் கட்ட ஆய்வும் மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x