டெல்டா பிளஸ் தொற்று என நாடகமாடி ஆந்திராவில் மனைவியை கொலை செய்த கணவன் கைது

டெல்டா பிளஸ் தொற்று என நாடகமாடி ஆந்திராவில் மனைவியை கொலை செய்த கணவன் கைது
Updated on
1 min read

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பத்வேல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ரெட்டி. இவரது மனைவி பொறியாளர் புவனேஸ்வரி(27). இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகள் உள்ளார். இவர்கள் திருப்பதி டிபிஆர் சாலையில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 22ம் தேதி முதல் புவனேஸ்வரியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், அவர்களது வீட்டார், ஸ்ரீகாந்திடம் போன் மூலம் கேட்டதற்கு, ”புவனேஸ்வரிக்கு டெல்டா பிளஸ் கரோனா தொற்று ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தேன். இதில் அவர் மரணமடைந்தார். அவர்கள் எனக்கு கூட உடலை காண்பிக்காமல் எரித்து விட்டனர்” என்று நாடகமாடினார்.

இதனால் சந்தேகமடைந்த புவனேஸ்வரி வீட்டார் கர்னூலில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் புவனேஸ்வரியின் அக்கா மகளான மமதாவிடம் தகவல் தெரிவித்தனர். இதனிடையே, கடந்த 23-ம்தேதி, திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையின் பின்புறம் ஒரு சிவப்பு நிற சூட்கேஸில் உடல் வெட்டப்பட்டு, எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் காணப்பட்டது. இது குறித்து அலிபிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் மமதா திருப்பதிக்கு வந்து,விசாரணை நடத்தியதில் கண்காணிப்பு கேமராவில் ஸ்ரீகாந்த் ரெட்டி, சிவப்புநிற சூட்கேசுடன் செல்வது பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதனிடையே நேற்று ஸ்ரீகாந்த் ரெட்டி கைதானார். ஒன்றரை வயது மகளின் கண் முன் மனைவியை வெட்டி, கொண்டு சென்று எரித்ததை அப்போது போலீஸாரிடம், ஸ்ரீகாந்த் ரெட்டி ஒப்புக்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in