Published : 29 Jun 2021 06:11 AM
Last Updated : 29 Jun 2021 06:11 AM

இறந்தவர்களின் உடல் கங்கையில் வீசப்பட்டது ஒரு தீவிர பிரச்சினை: பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி

இறந்தவர்களின் உடல் கங்கை ஆற்றில் வீசப்பட்டது ஒரு தீவிரப் பிரச்சினை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இறந்தவர்களின் உரிமைகளை பாதுகாக்க கொள்கை வகுக்க வேண்டும், கரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று கோரி ஒரு தன்னார்வ அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவில், கடந்த மே மாதம் கரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்கள் கங்கை ஆற்றில் வீசப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “இந்தவிவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) ஏற்கெனவே சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே மனுதாரர் என்எச்ஆர்சி-யை அணுகவேண்டும். இது ஒரு தீவிரப்பிரச்சினை என்பதை நாங்கள்அறிந்துள்ளோம். அதிர்ஷ்டவசமாக அத்தகைய ஒரு சூழல் தற்போது இல்லை” என்று தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் என்எச் ஆர்சி கடந்த மாதம், “இறந்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும். புதிதாக தற்காலிக மயானங்கள் ஏற்படுத்த வேண்டும்” என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை அளித்திருந்தது.

கடந்த மே மாத தொடக்கத்தில் நாட்டில் கரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது, பிஹார் மற்றும் உ.பி.யில் ஒவ் வொரு நாளும் இறந்தவர்களின் உடல்கள் நூற்றுக்கணக்கில் கங்கை ஆற்றில் மிதந்து வந்தன.

இவை, கிராமப்புறங்களில் கரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்கள் என கூறப்பட்டது. கரோனா நோயாளிகளின் சடலங்களை தகனம் செய்ய கிராமப்புறங்களில் உரிய நடைமுறைகள் அமலில் இல்லாத நிலையில் நோய்த் தொற்றுக்கு பயந்து உள்ளூர் மக்கள் இவற்றை ஆற்றில் வீசியதாக கூறப்பட்டது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, இனிமேலும் உடல்கள் ஆற்றில் வீசப்படுவதை தடுக்குமாறு உ.பி. மற்றும் பிஹார் அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இதனிடையே கங்கையில் உடல்கள் வீசப்பட்டதற்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை கோரி மற்றொரு பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசார ணைக்கு வந்தது. இதனை நீதிபதி அசோக் பூஷண் தள்ளுபடி செய்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x