Last Updated : 27 Jun, 2021 09:19 AM

 

Published : 27 Jun 2021 09:19 AM
Last Updated : 27 Jun 2021 09:19 AM

காஷ்மீரில் விமானப்படை தளத்தில் குண்டு வெடிப்பு: நிபுணர்கள் ஆய்வு

ஜம்மு காஷ்மீரில் விமானப்படை தளத்தின் தொழில்நுட்பப் பிரிவு வளாகத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் பயங்கர வெடிப்புச் சத்தம் கேட்டது.

குண்டு வெடிப்பு ஏதும் நிகழ்த்தப்பட்டதா என்று தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து, அங்கு தடயவியல் நிபுணர்களும், வெடிகுண்டு அகற்றும் நிபுணர்களும் சென்று ஆதாரங்களை திரட்டினர். பெருமளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விமானப் படை தரப்பில் ட்விட்டரில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், "ஞாயிறு அதிகாலை இரண்டு சிறு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. ஜம்மு விமானப்படை தளத்தின் தொழில்நுட்பப் பிரிவு வளாகத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஒரு வெடிகுண்டு வெடித்ததில் கூரை சேதமடைந்தது. இன்னொரு குண்டு திறந்தவெளியில் வெடித்தது. எவ்வித பொருள் சேதமும் ஏற்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2019ல் ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர், ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

தற்போது ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக அங்கு தொகுதி மறுவரையறை செய்யும் பணிகள் முன்னேற்பாடு நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் மூவர் காயமடைந்தனர். ஸ்ரீநகரில் இச்சம்பவம் நடந்தது. இந்நிலையில், இன்று விமான நிலைய வளாகத்தில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

முதல் முறை..

இந்திய ராணுவம் முதல் முறையாக ட்ரோன் தாக்குதலை எதிர்கொண்டுள்ளது. எல்லைகளில் ட்ரோன் மூலம் நடக்கும் தாக்குதல் முறியடிக்கப்படுவது வழக்கமானதே. ஆனால் முதல் முறையாக எல்லைக்குள் ஊடுருவி ட்ரோன் மூலம் அதுவும் இந்திய விமானப் படை மீது இப்படியொரு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x