Last Updated : 27 Jun, 2021 03:12 AM

 

Published : 27 Jun 2021 03:12 AM
Last Updated : 27 Jun 2021 03:12 AM

உத்தரபிரதேசத்தில் மாணவ, மாணவிகளை முஸ்லிமாக மதம் மாற்றுவதாக புகார்: 2 மவுலானாக்கள் கைது

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வாய் பேசாத மாற்றுத்திறனாளியாக இருப்பவர் ஆதித்யா. இவர் கடந்த வருடம் மார்ச் 10-ல் வீட்டை விட்டு சென்றவர் முஸ்லிமாக மதம் மாறி அப்துல் என்ற பெயரில் கேரளாவிற்கு இடம் பெயர்ந்துள்ளார். இதை அறிந்த அவரது தாய் லஷ்மி கான்பூரின் கல்யாண்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த வழக்கு உ.பி.யின் ஏடிஎஸ் சிறப்புபடைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் மவுலானா முகம்மது உமர் கவுதம் மற்றும் மவுலானா ஜஹாங்கீர் காஸ்மி ஆகிய இருவர்டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் உமர் கவுதம் 1984-ல் இந்துவாக இருந்து முஸ்மாக மதம் மாறியவர்.

இவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களின்படி, ஆதித்யா கல்வி பயின்ற கான்பூரின் ஜோதி டெஃப் வித்தியாலயாவில் பல மாணவர்கள் மதம் மாற்றப் பட்டுள்ளனர். மதமாற்றத்திற்கு பின் அவர்கள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் கூறப் படுகிறது. ஆதித்யாவிற்கும் கேரளாவில் ரூ.7,000 மாத சம்பளத்திற்கு முஸ்லிம் அமைப்பின் மூலம் வீட்டு வேலை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

நொய்டாவிலுள்ள காது கேளாதவர்களுக்கான நிறுவனமான ‘டெஃப் சொஸைட்டி யின் 18 மாணவர்களும் மதம் மாறியுள்ளதாக ஏடிஎஸ் விசா ரணையில் தெரிந்துள்ளது. இதிலும் மவுலானாக்களான முகம்மது உமர் கவுதம் மற்றும் ஜஹாங்கீர் காஸ்மிக்கு தொடர்புகள் இருப்பது அறியப்பட்டுள்ளது.

பதேபூர் நூருல் ஹுதா பள்ளியில் முகம்மது கவுதம் ஒரு மாதம் பணியாற்றிய போது இஸ்லாம் பற்றி மாணவர்களிடம் உரை நிகழ்த்தி உள்ளார். இந்து மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஏடிஎஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘உமர், காஸ்மியின் மின்னஞ்சல், வங்கிக் கணக்குகளை ஆராய்ந்த போது வெளிநாடுகளில் இருந்து இருவருக்கும் பணம் கிடைத்துள்ளது. இதை பதேபூர் உள்ளிட்ட சில மதரஸாக்களுக்கும் உமர் கவுதம் மதமாற்றத்திற்காக அளித்து வந்துள்ளார். இதனால், இவைகள் மீது மத்திய அமலாக்கத் துறையும் வழக்குகள் பதிவு செய்து விசாரிக்கிறது’’ எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x