Last Updated : 26 Jun, 2021 11:48 AM

 

Published : 26 Jun 2021 11:48 AM
Last Updated : 26 Jun 2021 11:48 AM

ராமர் கோயில் நில பேர ஊழல் புகார்; பிரதமர் விளக்கம் அளிக்க அயோத்தி சாதுக்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி

ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் மீது பல கோடி ரூபாய் நில பேர ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. இப்பிரச்சனையில் பிரதமர் நரேந்தர மோடி தலையிட்டு விளக்கம் அளிக்க வேண்டும் என அயோத்தியின் சாதுக்கள் நடத்திய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

அயோத்தி மீதான மேல்முறையீட்டு வழக்கில் கடந்த நவம்பர் 9, 2019 இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், இந்துக்கள் தரப்பிற்கு ஆதரவாக அங்கு ராமர் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய அரசு சார்பில் ராமர் கோயில் கட்டுவதற்காக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதன் சார்பில் கோயிலுக்காக பக்தர்கள் நன்கொடையில் விலைக்கு வாங்கப்படும் நிலங்கள் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது.

கடந்த மார்ச் 18 இல் ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்ட ஒரு நிலம் அடுத்த சில நிமிடங்களில் ரூ.18.5 கோடிக்கு அறக்கட்டளை வாங்கியதாகப் புகார் எழுந்தது. அடுத்து அயோத்தியின் ஒரு மடத்திற்கான நஜூல் நிலம், ரூ.30 லட்சத்திற்கு விற்கப்பட்டு ரூ.2.5 கோடிக்கு அறக்கட்டளை வாங்கியதாகவும் மற்றொரு புகார் உள்ளது.

இப்புகார்களுக்கு ராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் ஏற்கப்படும்படி இல்லை என அயோத்தியின் சாதுக்கள் கருதுகின்றனர். இதனால், நேற்று அவர்களில் சுமார் 150 சாதுக்கள் கூடி, கானொலி வாயிலாகக் கூட்டம் நடத்தினர்.

இதில், ராமர் கோயிலுக்கான நில பேர ஊழல் புகாரில் பிரதமர் மோடி தலையிட்டு விளக்கம் அளிக்கக் கோரியுள்ளனர். இக்கூட்டம் ராமஜென்ம பூமிக்கு அருகிலுள்ள ஹனுமர் கோயில் மடத்தின் தலைவரான மஹந்த் கியான்தாஸ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மஹந்த் கியாந்தாஸ் கூறும்போது, ‘‘பல்வேறு தனிப்பட்ட நபர்களால் வாங்கப்பட்ட நிலங்கள், உடனடியாக அறக்கட்டளைக்கு பல கோடி அதிக லாபத்தில் விற்கப்பட்டுள்ளது.

இதன் பெரும்பாலானப் பலனாளிகள் பாஜகவுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். இதனால், நில பேர ஊழலில் பிரதமர் தலையிட்டு விளக்கம் அளிப்பது அவசியம்’’ எனத் தெரிவித்தார்.

அயோத்தியின் ரகுவன்ஷ் கோயில் சேவை அறக்கட்டளையின் தலைவரான மஹந்த் திலீப் தாஸ் கூறும்போது, ‘‘இப்பிரச்சனையிலும் வழக்கம் போல் பிரதமர் மோடி மவுனம் காக்க வாய்ப்புகள் உள்ளன.

சிலர் ராமர் பெயரில் ஊழலுக்கு மேல் ஊழல் நடத்தி வருகிறார்கள் அவர்களிடமிருந்து நாம் ராமரை காக்கப் பாடுபடுவோம்’’ எனத் தெரிவித்தார்.

அயோத்தியின் பாஜக நகர மேயரான ரிஷிகேஷ் உபாத்யாவின் மருமகனான தீப் நாராயண் ஒரு மடத்திலிருந்து நஜூல் நிலத்தை வாங்கியிருந்தார். மாநில அரசிற்கு சொந்தமான இந்த குத்தகை நிலத்தை எவரும் விலைக்கு வாங்கவோ, விற்கவோ கூடாது என அரசு விதிமுறைகள் உள்ளன.

இதனால், இந்த நில பேரமும் ராமஜென்ம பூமி அறக்கட்டளையினரை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கி விட்டது. இதுபோன்ற புகார்களை விசாரிக்கு ஒரு குழு அமைக்க வேண்டும் எனவும் அயோத்தியின் சாதுக்கள் தம் கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x