Published : 25 Jun 2021 01:26 PM
Last Updated : 25 Jun 2021 01:26 PM

குடியரசுத் தலைவரான பிறகு முதல் ரயில் பயணம்: சொந்த கிராமத்துக்கு புறப்பட்டார் ராம்நாத் கோவிந்த்

புதுடெல்லி

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் இன்று கான்பூர் புறப்பட்டுச் சென்றார். குடியரசுத் தலைவராக இருக்கும் ஒருவர் 15 ஆண்டுகளுக்கு பின் ரயில் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகேயுள்ள பராங்க் கிராமத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தார். இங்கு ரயிலில் செல்லவும், அதன் மூலம் பொதுமக்கள் மற்றும் நண்பர்களை சந்திக்கவும் அவர் திட்டமிட்டார். கரோனா தொற்று காரணமாக அவரது பயணம் தள்ளிப்போனது.

இந்தநிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் இன்று கான்பூர் புறப்பட்டுச் சென்றார். அவரது மனைவியும் உடன் செல்கிறார். ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அதிகாரிகள் அவரை வழியனுப்பி வைத்தனர்.

இந்த ரயில் ஜின்ஜாக் மற்றும் கான்பூர் தெகத்தின் ரூரா பகுதியிலும் நின்று செல்லும். அங்கு குடியரசுத் தலைவர் தனது பள்ளிக்கால மற்றும் தனது ஆரம்ப சமூகசேவை கால நண்பர்களைச் சந்தித்து பேசுகிறார்.

ரயில் பயணத்தின்போது, குடியரசுத் தலைவர் தனது சிறு வயது முதல் நாட்டின் உயர்ந்த அரசியல் சாசன பதவிக்கு வந்தது வரை 70 ஆண்டு கால நினைவு பயணத்தில் பயணிக்கிறார்.

இந்த இரு இடங்களும் இந்த இரு இடங்களும், குடியரசுத் தலைவரின் பிறந்த இடமான பராங்க் கிராமத்துக்கு அருகே உள்ளது. இங்கு ஜூன் 27-ம் தேதி, குடியரசுத் தலைவருக்கு இரண்டு பாராட்டுவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

பின்னர் ஜூன் 28ம் தேதி கான்பூர் மத்திய ரயில்வே நிலையத்திலிருந்து சிறப்பு ரயிலில் பயணிக்கும் குடியரசுத் தலைவர், 2 நாள் பயணமாக லக்னோ வருகிறார். ஜூன் 29ம் தேதியன்று, அவர் சிறப்பு விமானம் மூலம் புதுடெல்லி திரும்புகிறார்.

இதற்கு முன்பு பல குடியரசுத் தலைவர்கள் ரயில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் டெல்லியிருந்து சிறப்பு ரயில் மூலம் டேராடூன் சென்று, இந்திய ராணுவ அகாடமியின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டார்.

அதன்பிறகு குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் ரயிலில் பயணம் செய்யவில்லை. 15 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் தற்போது குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் பயணம் செய்கிறார். அவர் பதவி ஏற்றபின்பு முதன்முறையாக இந்த ரயில் பயணத்தை மேற்கொள்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x