Last Updated : 12 Dec, 2015 08:06 AM

 

Published : 12 Dec 2015 08:06 AM
Last Updated : 12 Dec 2015 08:06 AM

முல்லை பெரியாறில் புதிய அணை அவசியம்: பிரதமரிடம் கேரள முதல்வர் வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கேரள முதல்வர் உம்மன் சாண்டி வலியுறுத்தியுள்ளார்.

முல்லை பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதால், அதற்குப் பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘அணை வலுவாக உள்ளது. அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம்’ என்று ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

தற்போதைய மழையில் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் கடந்த வாரம் 133 அடியை தாண்டியது. இதைத் தொடர்ந்து அணையை ஆய்வு செய்த மத்திய நீர்வளத் துறை கண்காணிப்புக் குழு 142 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்த அனுமதி அளித்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பேபி அணையை பலப்படுத்திவிட்டு முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடி வரைகூட உயர்த்தலாம் என்றும் கண்காணிப்புக் குழு அறிவுறுத்தியது.

இதுதொடர்பாக கடந்த 9-ம் தேதி கேரள அமைச்சரவை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதன்பின்னர் நிருபர்களி டம் பேசிய முதல்வர் உம்மன் சாண்டி,

‘முல்லை பெரியாறு அணையில் இருந்து உபரி நீர் இடுக்கி அணைக்கு திறந்துவிடப் பட்டுள்ளது. இதனால் இடுக்கி மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர். புதிய அணை கட்டுவதுதான் முல்லை பெரியாறு பிரச்சி னைக்கு ஒரே தீர்வு’ என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சரவைக் குழு பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசியது. அப்போது முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று மோடியிடம் உம்மன் சாண்டி வலியுறுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

முல்லை பெரியாறு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வர வில்லை என்றால் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சோலார் ஊழல் விவகாரம் குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x