Published : 24 Jun 2021 04:24 PM
Last Updated : 24 Jun 2021 04:24 PM

80% பொம்மைகளை இந்தியா இறக்குமதி செய்கிறது; கோடிக்கணக்கான ரூபாய் விரயமாகிறது: பிரதமர் மோடி

புதுடெல்லி 

சுமார் 80% பொம்மைகளை இந்தியா இறக்குமதி செய்கிறது, நாட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் விரயமாகிறது என பிரதமர் மோடி கூறினார்.

தற்சார்பு இந்தியாவாக உருவாகும் பாதையில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாக, கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஆகியவை இணைந்து புதுமையான பொம்மைகளுக்கான போட்டி ‘டாய்கத்தான்-2021’ நடத்துகிறது.

டாய்கத்தான்-2021 போட்டியின் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் சஞ்சய் தோத்ரே ஆகியோர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த 5-6 ஆண்டுகளாக ஹேக்கத்தான் தளங்கள் வாயிலாக நாடு எதிர்கொள்ளும் முக்கிய சவால்களுடன் இளைஞர்கள் இணைந்திருக்கிறது. நாட்டின் திறன்களை ஒழுங்குப்படுத்துவதும், அவர்களுக்கு ஓர் தளத்தை உருவாக்குவதும் இதன் பின்னணியில் உள்ள எண்ணமாகும்.

குழந்தைகளின் முதல் நண்பன் என்ற முக்கியத்துவத்தையும் கடந்து “டாய்கானமி” ஆகும். சர்வதேச பொம்மை சந்தை சுமார் 100 பில்லியன் டாலர் அளவில் இருக்கிறது. ஆனால் இதில் இந்தியா வெறும் 1.5 சதவீதத்தைப் பெற்றிருக்கிறது.

சுமார் 80% பொம்மைகளை இந்தியா இறக்குமதி செய்கிறது. நாட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் விரயமாகிறது என்பதை இது குறிக்கிறது. இந்தப் போக்கு மாறவேண்டும். ஊரக மக்கள், தலித்கள், ஏழை மக்கள் மற்றும் பழங்குடியினத்தவரை உள்ளடக்கிய கலைஞர்களுடன் தனக்கே உரித்தான சிறு தொழிலை பொம்மை தொழில்துறை தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்தத் துறையின் பலன்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் உள்ளூர் பொம்மைகளுக்கு நாம் குரல் கொடுக்க வேண்டும். இந்திய பொம்மைகள் சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கு ஏதுவாக புதிய கண்டுபிடிப்புகளின் நவீன மாதிரிகள் மற்றும் நிதி ஆதரவு அளிக்க வேண்டும்.

புதிய எண்ணங்கள் மேம்படவும், புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், பாரம்பரிய பொம்மை தயாரிப்பாளர்களிடம் புதிய தொழில்நுட்பங்களை எடுத்துச் செல்லவும், புதிய சந்தையை உருவாக்கவும் அவசியம் ஏற்பட்டுள்ளது. டாய்கத்தான் போன்ற நிகழ்ச்சிகளின் பின்னணியில் இதுவே உந்துசக்தியாக இருக்கிறது.

குறைந்த கட்டணம் மற்றும் இணைய வளர்ச்சியுடன் கூடிய ஊரக இணைப்பைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், இந்தியாவில் மெய்நிகர், மின்னணு மற்றும் இணையதள விளையாட்டுகளின் சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய வேண்டும்.

தற்போது உள்ள பெரும்பாலான இணையதள மற்றும் மின்னணு விளையாட்டுகள், இந்திய எண்ணங்களின் அடிப்படையில் இல்லாமல் ஏராளமானவை வன்முறையை ஊக்குவித்து, மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளன.

இந்தியாவின் திறன்கள், கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் சமூகம் பற்றி தெரிந்து கொள்ள உலக நாடுகள் ஆர்வமாக உள்ளன. அதில் பொம்மைகள் மிகப் பெரும் பங்கு வகிக்கலாம். மின்னணு விளையாட்டிற்கு இந்தியாவில் போதிய தகவல்களும் ஆற்றலும் உள்ளன. இந்தியாவின் திறன்கள் மற்றும் எண்ணங்களின் உண்மை நிலவரத்தை உலகிற்கு வெளிப்படுத்துகையில் இளம் கண்டுபிடிப்பாளர்களும் புதிய நிறுவனங்களும் தங்களது பொறுப்புணர்ச்சியைக் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

பொம்மை தொழில்துறையைச் சேர்ந்த புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு மிகப் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது சுதந்திரம் சம்பந்தமான பல்வேறு நிகழ்வுகள், விடுதலைப் போராட்ட வீரர்களின் கதைகள், அவர்களது வீரம் மற்றும் தலைமைப் பண்பு முதலியவை விளையாட்டு கருத்துருக்களாக உருவாக்கப்படலாம்.

சாமானிய மக்களை எதிர் காலத்துடன் இணைக்கும் மிகப்பெரிய பங்களிப்பை இந்தக் கண்டுபிடிப்பாளர்கள் பெற்றுள்ளார்கள். ஈடுபாடு, பொழுதுபோக்கு மற்றும் கல்வி' ஆகியவற்றை அளிக்கும் ஆதரவைத் தூண்டும் வகையிலான விளையாட்டுகளை உருவாக்குவதற்கு அவசியம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x