

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஓய்வூதியம் வழங்குகிறது. தீவிரவாதிகளை ஊக்குவிப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அந்நாட்டை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியா புகார் எழுப்பியுள்ளது.
ஐ.நா. மனித உரிமை ஆணையரின் வருடாந்திர அறிக்கை மீது, மனித உரிமை ஆணையத்தில் நேற்று முன்தினம் விவாதம் நடைபெற்றது. அப்போது காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் பிரதிநிதி காலில் ஹாஷ்மி எழப்ப முயன்றார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, இந்தியப் பிரதிநிதி பவன் குமார் பாதே பேசியதாவது:
ஐ.நா.வால் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவர்கள் மற்றும் கொடூர தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்து உபசரித்து வருகிறது. அவர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் அளித்து வருகிறது. தீவிரவாதத்தை ஊக்குவிப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அந்நாட்டை பொறுப்பேற்கச் செய்யவேண்டும். தீவிரவாதத்தால் ஏற்படும் துன்பம், மனித உரிமைமீறலாகும். இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம் அன்றாட நிகழ்வாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறுபான்மையின சிறுமிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றனர். பத்திரிகையாளர்கள் கடத்தப்படும், கொல்லப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. குற்றவாளிகள் மீது நவடிக்கை எடுக்கப்படுவதில்லை. பாகிஸ்தான் தனது மனித உரிமை மீறல்களில் இருந்து ஆணையத்தின் கவனத்தை திசை திருப்ப, காஷ்மீர் விவகாரத்தை எழுப்புகிறது. இவ்வாறு பவன் குமார் பாதே கூறினார்.