Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM
மேற்குவங்க முன்னாள் தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாயா மீது ஒழுங்கு நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாயாவின் பதவிக் காலம் கடந்த மே 31-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் மாநில அரசின் கோரிக்கையை ஏற்று அவருக்கு மத்திய அரசு மேலும் 3 மாதம் பணி நீட்டிப்பு வழங்கியது.
இந்நிலையில், யாஸ் புயலால்மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 28-ம் தேதி நேரில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாயா உள்ளிட்ட அதிகாரிகள் தாமதமாக வந்தனர். இதனால் மத்திய அரசுக்கும், மேற்குவங்க அரசுக்கும் இடையே மோதல் அதிகரித்தது.
தலைமைச் செயலாளர் அலபன்பந்தோபாத்யாயாவை மத்திய அரசு பணிக்கு வருமாறு உத்தரவிடப்பட்டது. இதற்கு மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்தார். இந்த பின்னணியில் தலைமைச் செயலாளர் அலபன் மே 31-ம்தேதியுடன் ஓய்வு பெற்றுவிட்டதாகவும் அவர் முதல்வர் மம்தாவின் தலைமை ஆலோசகராக 3 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார் என்றும் மேற்குவங்க அரசு அறிவித்தது.
இதனிடையே மத்திய அரசின் உத்தரவுகளை மதிக்காமல் நடந்ததற்காக அலபன் மீது ஒழுங்குநடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் கடந்த 16-ம் தேதி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த நோட்டீஸுக்கு 30 நாட்களில் பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT