Published : 22 Jun 2021 04:13 PM
Last Updated : 22 Jun 2021 04:13 PM

காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை ஏற்க முடியாது: குப்கர் தலைவர்கள் உறுதி

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை ஒருபோதும் ஏற்க முடியாது என குப்கர் கூட்டணி தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக வரும் 24ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால் தொகுதி மறுவரையறை தொடர்பாக விவாதிக்கப்பட இருப்பதாக பின்னர் தகவல் வெளியானது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மெஹபூபா முஃப்தி, உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் மெஹபூபா கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இதில் கலந்து கொள்வது தொடர்பாக குப்கர் அணி தலைவர்களான மெஹபூபா, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் இன்று ஆலோசனை நடத்தினர். அப்போது பிரதமர் மோடி விடுத்துள்ள அழைப்பை ஏற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

‘‘கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதில் எந்த சமரசமும் இல்லை. இதனை நாங்கள் மத்திய அரசிடம் தெளிவாக விளக்குவோம். காஷ்மீர் மாநிலம் இழந்த அதிகாரத்தை பெற வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு. ’’ எனக் கூறினார்.

பின்னர் பேசிய மெஹபூபா முப்தி கூறுகையில் ‘‘உலக அளவில் அமைதியை கொண்டு வர தலிபான்களுடன் கூட அரசு பேச்சவார்த்தை நடத்துகிறது. அப்படியிருக்கும்போது காஷ்மீர் பிரச்சினை குறித்தும் பேச முடியாதா? பாகிஸ்தான் தீர்மானம் தொடர்பாக அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும். அதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x