Published : 22 Jun 2021 10:09 AM
Last Updated : 22 Jun 2021 10:09 AM

உலக அளவில் சாதனை: ஒரே நாளில் 86.16 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

புதுடெல்லி

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 86.16 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை உலக அளவில் ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கையில் சாதனை அளவாகும்.

இந்தியாவில், கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு வகையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் 5 தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதியன்று கரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கியது. முதற்கட்டமாக மருத்துவ, சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது அதேபோல் 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.

இரண்டாவது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் இல்லாதோர் உள்ளிட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

3-வது தடுப்பூசி திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்த திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. முதல் நாளில் இதுவரை இல்லாத அளவு 86.16 லட்சம் (86,16,373) பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை உலக அளவில் ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கையில் சாதனை அளவாகும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு நாளொன்றுக்கு ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவது என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x