Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங். தலைமையிலான அரசு கொண்டுவந்த எண்ணெய் கடன் பத்திரங்களே காரணம்: பாஜக தலைமையிலான மத்திய அரசு குற்றச்சாட்டு

புதுடெல்லி

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) அரசு செயல்படுத்திய எண்ணெய் கடன் பத்திரங்கள்தான் காரணம் என்று பாஜக தலைமையிலான மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது.

யுபிஏ ஆட்சியின்போது வெளியிடப்பட்ட கடன் பத்திரங்கள் இப்போது முதிர்வடையத் தொடங்கியுள்ளன. இந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடியை திருப்பித் தர வேண்டியுள்ளது. 2021, 2023, 2024, 2025, 2026 ஆகிய நிதி ஆண்டுகளில் இந்த கடன் பத்திரங்கள் முதிர்வடைகின்றன. மொத்த கடன் பத்திர அளவு ரூ.1.30 லட்சம் கோடியாகும்.

2004 முதல் 2014-ம் ஆண்டுவரையான காலத்தில் செயல்படுத்திய இந்த கடன் பத்திர வெளியீட்டை நிதி மோசடி என்றும் பாஜக அரசு குற்றம்சாட்டி உள்ளது. அப்போதைய ஆட்சியில் அரசு அதிகாரிகளாக இருந்தவர்கள், உரிய ஆலோசனை வழங்காமல் தங்களது பொறுப்பிலிருந்து விலகியிருந்தது பட்டவர்த்தனமாக தெரிகிறது. அரசியல்வாதிகள் மட்டுமின்றி உயர் அதிகாரிகளுமே இதற்கு பொறுப்பு என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் அரசிடமிருந்து பெற வேண்டிய மானிய தொகைக்குப் பதிலாககடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளன. சந்தை விற்பனை விலையைவிட குறைந்த விலைக்கு விற்பனை செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களை அரசு வலியுறுத்தி உள்ளது. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பு இந்த கடன் பத்திரங்கள் மூலம் ஈடு செய்யப்பட்டது.

மானிய பற்றாக்குறையை சமாளிக்க மிகவும் சாதுர்யமாக இந்தகடன் பத்திர யோசனை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக அரசு உயர் அதிகாரிகள், பொருளாதார ஆலோசகர்கள், ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆகியோர் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசுக்கு உள்ள பொறுப்பை அடுத்து வரும் அரசுக்கு தள்ளிவிடும் போக்கில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். அரசியல்வாதிகள் அரசியல் லாபத்துக்கு சில நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் ஆலோசகர்களாக உள்ள உயர் அதிகாரிகள் இதுகுறித்து எச்சரித்திருக்கலாம். மாறாக தங்களது பொறுப்பிலிருந்து விலகி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x