

‘‘பாரீஸில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின், முதல் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அது இந்தியாவுக்கு திருப்தி அளிக்கவில்லை’’ என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் புவி வெப்பமடைதலை தடுக்க, பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு இன்றுடன் நிறை வடைகிறது.
இதை முன்னிட்டு 2 நாட்கள் தீவிர ஆலோசனைக்குப் பிறகு, புவிவெப்பமடைதலை தடுப்பதற் கான வழிமுறைகளுடன் முதல் வரைவு அறிக்கையை பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் லாரன்ட் பேபியஸ் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
பருவநிலை மாற்றம் குறித்து இந்தியா தெரிவித்த கவலைகள் எதுவும் வரைவு அறிக்கையில் சேர்க்கப்படவில்லை. குறிப்பாக பருவநிலை மாற்றத்தை தடுக்க உலக நாடுகள் தாமாக முன்வந்து உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற யோசனை சேர்க்கப்படவில்லை.
மேலும், வளர்ந்த நாடுகள் அதிக அளவில் கரியமில வாயு வெளியேற்றுவதை தடுக்க வேண்டும், புவிவெப்பமடைதலை தடுக்க வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதியுதவி அளிக்க வேண்டும் போன்ற இந்தியாவின் யோசனைகளையும் சேர்க்கவில்லை. இந்த யோசனை களை ஏற்றால், 186 நாடுகள் மாசை குறைக்க நடவடிக்கை எடுக்க இயலும்.
நீடிக்கத்தக்க வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதும் வரைவு அறிக்கையில் இடம்பெறவில்லை. மாறாக புவி வெப்பமடைதலுக்கு காரணமான அதிக கரியமில வாயுவை வெளியேற்றும் நாடுகளையும், பாதிக்கப்பட்ட நாடுகளையும் ஒரே அளவில் வைத்து வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வளரும் நாடுகள் மீது பொறுப்பை திணிக்க வளர்ந்த நாடுகள் முயற்சிக் கின்றன. வளரும் நாடுகளின் கோரிக்கைகளை வளர்ந்த நாடுகள் ஏற்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
எனினும், வரைவு அறிக் கையை கவனமாக படித்து பார்த்த பின், நட்பு நாடுகளுடன் கலந்தாலோசித்து ஒப்பந்தம் மேற்கொள்ள இந்தியா முயற் சிக்கும்.
இவ்வாறு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.