Published : 20 Jun 2021 11:13 AM
Last Updated : 20 Jun 2021 11:13 AM

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்புப்பணம்; 2020-ல் ரூ. 20,700 கோடி?- மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்

சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் ரூ. 20,700 கோடியாக இருந்ததாக வெளியான தகவல் குறித்து மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் நிதி தொகை 2020 ஆம் ஆண்டின் இறுதியில் ரூ. 20,700 கோடியாக இருந்ததாகவும், இதற்கு முந்தைய 2019-ஆம் ஆண்டு இறுதியில் இந்தத் தொகை ரூ. 6,625 கோடியாக இருந்ததாகவும் இதன்படி 2 ஆண்டுகளாகக் குறைந்து வந்த நிதித் தொகை, தற்போது தலைகீழாக மாறி இருப்பதாகவும் 18.6.2021 அன்று வெளியான ஒரு சில ஊடக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் இதுவே மிக அதிக வைப்புத் தொகை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள், வங்கிகளால் சுவிஸ் தேசிய வங்கிக்குத் தெரிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான தகவல்கள் என்றும், இந்தியர்கள் வைத்திருப்பதாக அதிகம் விவாதிக்கப்படும் கறுப்புப் பணத்தின் விபரம் இதில் இடம்பெறவில்லை என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இதர மக்கள் மூன்றாம் நாட்டு நிறுவனங்களின் பெயரில் வைத்துள்ள தொகை பற்றியும் இந்தப் புள்ளி விவரங்களில் குறிப்பு இல்லை.

எனினும் நுகர்வோர் வைப்புத் தொகை 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் சரிந்துள்ளது. பொறுப்பானவர்கள் மூலம் வைக்கப்பட்டிருக்கும் நிதி 2019-ஆம் ஆண்டு முடிவிலிருந்து பாதியாகக் குறைந்து விட்டன. வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய பிற தொகையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இவை பத்திரங்கள் மற்றும் பல்வேறு வடிவங்களில் உள்ளன.

வரி சம்பந்தமான விஷயங்களில் பரஸ்பர நிர்வாக உதவிக்கான பலதரப்பு அவைகள் மற்றும் பலதரப்பு தகுதி வாய்ந்த ஆணையக ஒப்பந்தம் ஆகியவற்றில் இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் கையெழுத்திட்டுள்ளதால், 2018ஆம் ஆண்டு முதல் நிதி கணக்குகள் பற்றிய தகவல்களை இரு நாடுகளும் வருடந்தோறும் பகிர்ந்து வருகின்றன.

ஒவ்வொரு நாட்டில் வசிப்பவர்களின் நிதி கணக்கு தகவல்களை இரு நாடுகளும் 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டில் பரிமாறிக் கொண்டுள்ளன. நிதி கணக்குகளின் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான தற்போதைய சட்ட ஏற்பாட்டின் பார்வையில் சுவிஸ் வங்கிகளில் வைப்புத் தொகை அதிகரிப்பதற்கான குறிப்பிடத்தக்க சாத்தியக்கூறுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஊடக செய்தி அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில்கொண்டு அதிகரிப்பு, குறைவுக்கான உண்மை நிலவரத்துடன் அவர்களது கருத்துக்களையும் முன்வைக்குமாறு சுவிஸ் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x