Published : 20 Jun 2021 03:12 AM
Last Updated : 20 Jun 2021 03:12 AM

ஒரு கிலோ மாம்பழத்தின் விலை ரூ.2.7 லட்சம்: ம.பி.யில் 7 மாம்பழங்களுக்கு 4 காவலர், 6 நாய்கள் பாதுகாப்பு

மத்திய பிரதேசம், ஜபல்பூரில், சங்கல்ப் சிங் பண்ணையில் காய்த்திருக்கும் மியாசாகி மாம்பழங்கள்.

போபால்

மத்திய பிரதேசத்தில் அரிய வகையை சேர்ந்த 2 மாமரங்களில் காய்த்துள்ள 7 மாம்பழங்களுக்கு 4 காவலர்கள், 6 நாய்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்தவர் சங்கல்ப் சிங் பரிஹார். இவர் 12 ஏக்கரில் பல்வேறு வகையான பழ மரங்களை வளர்த்து வருகிறார். இதில் 14 வகையான மாமரங்களும் உள்ளன. இவற்றில் 2 மரங்களில், அரிய வகை மியாசாகி மாம்பழங்கள் காய்த்துள்ளன.

சர்வதேச சந்தையில் மியாசாகி மாம்பழங்கள், ஒரு கிலோ ரூ.2.7 லட்சத்துக்கு விற்பனையாகி வருகின்றன. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், போலிக் அமிலம் அதிகம்.அத்துடன் நல்ல சுவையும் மணமும் இதில் உள்ளது. ஜப்பானின் மியாசாகி நகரில் இந்த மாம்பழங்கள் அதிகம் விளைவிக்கப்படு வதால், அந்த நகரின் பெயர் மாம்பழத்துக்கு சூட்டப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், சங்கல்ப் சிங் பண்ணையில் உள்ள 2 மியாசாகி மரங்களில் 7 மாம்பழங்கள் மட்டுமே காய்த்துள்ளன. இந்தத் தகவல் வெளியானதால் திருடர்கள், அவரது பண்ணையை நோட்டமிட தொடங்கினர். இதையடுத்து, 4 காவலர்கள், 6 நாய்கள் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

சென்னை மாமரங்கள்

இதுகுறித்து சங்கல்ப் சிங்கூறும்போது, "ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தென்னை மரக்கன்றுகளை வாங்குவதற்காக சென்னைக்கு சென்றேன். அப்போது ரயிலில் என்னுடன் பயணித்த ஒருவர், தனது நர்சரியில் இருந்து 6 வகையான மாமர கன்றுகளை தந்தார். இதில் 2 மியாசாகி வகை என்பது இப்போதுதான் தெரியவந்துள்ளது.

சர்வதேச சந்தையில் மியாசாகி என்ற பெயர் இருந்தாலும் எனது தோட்டத்தில் காய்த்துள்ள மாம்பழங்களுக்கு எனது தாயான தாமினியின் பெயரை சூட்டியுள்ளேன். ஒரு மாம்பழத்தை ரூ.21,000 விலை கொடுத்து வாங்க மும்பை தொழிலதிபர் ஒருவர் முன்வந்துள்ளார். ஒரு மாம்பழம் 350 கிராம் இருக்கும்" என்றார்.

இதுகுறித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தோட்டக் கலைத் துறை பேராசிரியர் எஸ்.கே.பாண்டே கூறும்போது, "இந்தியாவில் 1,200 வகையான மாம்பழங்கள் உள்ளன. சங்கல்ப் சிங் தோட்டத்தில் காய்த்துள்ள மாம்பழங்கள், மியாசாகி போன்று இளஞ்சிவப்பு, அடர் சிவப்பு நிறத்தில் இருப்பதால் மியாசாகி என்றுகருதுகிறார். மாம்பழத்தின் மரபணுவை சோதித்தால் மட்டுமே அது எந்த வகை மாம்பழம் என்பதை உறுதி செய்ய முடியும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x