Last Updated : 19 Jun, 2021 06:57 PM

 

Published : 19 Jun 2021 06:57 PM
Last Updated : 19 Jun 2021 06:57 PM

தெலங்கானாவில் முடிவுக்கு வருகிறது கரோனா ஊரடங்கு: ஜூலை 1 முதல் அனைத்து கல்வி நிலையங்களும் திறப்பு

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் கோரப்பிடி தளர்ந்துவரும் நிலையில், ஜூலை 1 முதல் அனைத்துப் பள்ளிகளையும் திறப்பதாக தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அனைத்து கல்வி நிலையங்களையும் வரும் ஜூலை 1ம் தேதி முதல் திறக்கும்படி கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களை மாணவர்கள் வருகைக்கு தயார்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தயார் செய்யுமாறு கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று தாக்கியதிலிருந்தே கடந்த 2019 மார்ச் முதலே நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடியே இருக்கின்றன.

இந்நிலையில் தெலங்கானா மாநிலம் முழு அளவில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக கல்வி நிறுவனங்களைத் திறக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இது தொடர்பாக முதல்வர் சந்திரசேகர ராவின் ஃபேஸ்புக் பக்கத்தில், தெலங்கானாவில் பூரண ஊரடங்கு விலக்கு அளிக்க அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. மருத்துவ நிபுணர்கள் அளித்த ஆய்வறிக்கையின்படி இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது.

தெலங்கானாவில் இப்போதைக்கு கரோனா பரவல் எண்ணிக்கை 1.14% ஆக இருக்கிறது. கடந்து 24 மணி நேரத்தில் 1400 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகியுள்ளது. அதனால், தளர்வுகளை முழுமையாக செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x