Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM

செல்வாக்குமிகுந்த தலைவர்களில் உலக அளவில் மோடி முதலிடம்: அமெரிக்க நிறுவன கருத்துக் கணிப்பில் தகவல்

உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்', உலக தலைவர்களின் தலைமை குறித்து அண்மையில் ஆய்வு நடத்தியது.

இதன்படி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி,கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ ஆகிய 13 நாடுகளின் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இந்த கருத்துக் கணிப்பில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 66 சதவீதம் பேர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 28 சதவீதம் பேர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019 ஆகஸ்டில் மார்னிங் கன்சல்ட் இதேபோல கருத்துக் கணிப்பு நடத்திமுடிவுகளை வெளியிட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு 82 சதவீதம் பேர்ஆதரவும், 11 சதவீதம் பேர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். தற்போதைய கருத்துக் கணிப்பில் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்திருந்தாலும் உலகளாவிய அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் அவர் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

மார்னிங் கன்சல்ட் கருத்துக் கணிப்பில் இத்தாலி பிரதமர் மரியோ தெராகி 65 சதவீத ஆதரவினைப் பெற்று 2-வது இடத்தில் உள்ளார். மெக்ஸிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் 63%, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 53%, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் 53%, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 53%, கனடா பிரதமர் ஜஸ்டின் 48%, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் 44%, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் 37%, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சஸ் 36%, பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனரோ 35%, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் 35%, ஜப்பான் பிரதமர் யோசிகிடோ சுகா 29% வாக்குகளை பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

மார்னிங் கன்சல்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸாஸ் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையால் உலக தலைவர்களின் செல்வாக்கு சரிந்துள்ளது. இந்த வரிசையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கும் சரிந்திருக்கிறது. எனினும் உலகளாவிய அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் அவர் முதலிடத்தில் உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும். இந்தியாவின் மொத்த கரோனா தடுப்பூசி உற்பத்தியில் 75 சதவீதத்தை மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும். வரும் நவம்பர் மாதம் வரை 80 கோடி மக்களுக்கு ரேஷனில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதன்மூலம் அவரது செல்வாக்கு உயர்ந்திருக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x