Published : 18 Jun 2021 05:23 PM
Last Updated : 18 Jun 2021 05:23 PM

பாபா கா தாபா உணவக உரிமையாளர் தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி

டெல்லியில் பாபா கா தாபா உணவக உரிமையாளர் தற்கொலைக்கு முயற்சித்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி மாளவியா நகரில் வசிப்பவர் 80 வயது முதியவர் காந்தா பிரசாத், 'பாபா கா தாபா' என்ற பெயரில் தகரக் கொட்டகையில் சிறிய உணவகம் நடத்தி வந்தார். அவரும் அவரது மனைவி பதாமி தேவியும் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உணவகத்தை நடத்தி வந்தனர். கடந்த வருடம் கரோனா நெருக்கடியால் இவர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. வருமானம் இல்லாத நிலையில் தொழிலைக் கைவிடாமல் தொடர்ந்து உணவகம் நடத்தி வந்தனர்.

கடந்த அக்டோபர் 7-ம் தேதி அன்று கவுரவ் வாசன் என்ற தன்னார்வச் செய்தியாளர், முதியவர் காந்தா பிரசாத்தின் உணவகத்துக்குச் சென்றார். சுவையான உணவு வகைகள், பிரபல ஓட்டல்கள் குறித்த செய்திகளைத் திரட்டி சமூக வலைதளங்களில் வெளியிடும் அவர், காந்தா பிரசாத் நடத்தி வரும் 'பாபா கா தாபா' உணவு வகைகள் குறித்துக் கேட்டறிந்தார். அவை குறித்து முழுமையாக வீடியோவில் பதிவு செய்து அனைத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார்.

வீடியோவில் முதியவர் காந்தா பிரசாத்தின் அழுகையைக் கண்ட டெல்லி மக்கள் திரண்டு சென்று அவருக்கு ஆதரவு அளித்தனர். மேலும், கவுரவ் மூலமாகப் பலரும் நிதி அனுப்ப ஆரம்பித்தனர். இதை வைத்து அந்த முதியவர் புதிதாக ஒரு உணவகத்தையே ஆரம்பித்தார். மேலும், தனக்கு அனுப்பப்பட்ட பணம் தன்னிடம் முழுதாக வந்து சேரவில்லை என்று கவுரவ் மீது மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து வழக்கு தொடர்ந்த சம்பவமும் நடந்தது.

இதற்கிடையே முதியவர் பிரசாத் புதிதாகத் தொடங்கிய உணவகமும் கரோனா நெருக்கடியால் பாதிப்புக்கு உள்ளானது. சாப்பிடுவதற்குக் குறைந்த வாடிக்கையாளர்களே வந்த நிலையில் போதிய வருமானமின்றி கஷ்டப்பட்டு வந்தார். அதனால் புதிய உணவகத்தை மூடிவிட்டு மீண்டும் தனது பழைய சாலையோர உணவகத்துக்கே வந்தார்.

இந்நிலையில் பாபா கா தாபா உணவக உரிமையாளர் காந்தா பிரசாத் திடீரெனத் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து டிசிபி அதுல் குமார் தாக்கூர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ''பிரசாத் சஃப்தார்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக வியாழக்கிழமை இரவு 11.15 மணிக்குத் தகவல் வந்தது. உடனடியாகக் காவல்துறையினர் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தனர். அதில் முதியவர் பிரசாத் மதுவை எடுத்துக் கொண்டதும் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு மயங்கி விழுந்ததும் தெரிய வந்தது'' என்று தெரிவித்தார்.

முதியவர் காந்தா பிரசாத்தின் மகன் கரண், தனது தந்தை மதுவையும், தூக்க மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டதாகத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய முதியவரின் மனைவி பதாமி தேவி, ''அவர் என்ன உட்கொண்டார் என்று தெரியவில்லை. கடையில் அவர் மயங்கி விழுந்ததும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x