Published : 18 Jun 2021 03:13 AM
Last Updated : 18 Jun 2021 03:13 AM

உத்தர பிரதேசத்தில் ரேஷன், ஆதார் கார்டுகள் இல்லை: 2 மாதம் பட்டினியாக இருந்த தாய், 5 குழந்தைகளுக்கு சிகிச்சை

அலிகர்

இரண்டு மாதமாக பட்டினியாக இருந்த தாய் மற்றும் அவரது 5 குழந்தைகளை தொண்டு நிறுவனத்தினர் மீட்டு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் அலிகரை சேர்ந்தவர் குட்டி (45). கரோனா வைரஸ் பரவல் முதல் அலையின் போது, இவரது கணவர் இறந்துவிட்டார். குட்டிக்கு 5 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் 20 வயது நிரம்பிய மூத்த மகன் மட்டும் கொத்தனார் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். ஆனால், கரோனா பரவல் 2-வது அலையில் அவருக்கும் வேலை இல்லை. இதனால் சாப்பாட்டுக்கே கஷ்டப் பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2 மாதமாக குட்டியும் அவரது 5 குழந்தைகளும் பட்டினியாக இருந்துள்ளனர். அவர்களைப் பற்றி தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் வீட்டுக்கு சென்று மிகவும் மோசமான நிலையில் இருந்த அனைவரையும் மீட்டு உடனடியாக அலிகர் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு குளுகோஸ் செலுத்தப்படுகிறது.

மருத்துவமனை அவசரப் பிரிவில் உள்ள டாக்டர் அமித் கூறும்போது, ‘‘குட்டி உட்பட 6 பேரும் மிகவும் நலிவுற்றுள்ளனர். அவர்களால் நடக்க கூட முடியவில்லை. தற்போது அனை வருக்கும் கஞ்சி மற்றும் சத்துள்ள உணவுகள் வழங்கி வருகிறோம். தற்போது அவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை’’ என்றார்.

இதுகுறித்து கேட்ட போது குட்டி கூறியதாவது:

கடந்த 3 மாதமாகவே வீட்டில் எந்தப் பொருளும் இல்லை. பட்டினியும் நோயும் எங்களை மிகவும் பாதித்து விட்டது. அக்கம் பக்கத்து வீட்டாரிடம் உணவு கேட்டோம். ஒரு நாள் அல்லது 2 நாள் தருகிறோம். தினமும் தரமுடியாது என்று கூறினர். அதனால் அவர்களிடம் நாங்கள் எதுவும் கேட்பதில்லை.

கிராமத் தலைவரிடம் சென்று உதவி கேட்டோம். தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று அவர் மறுத்துவிட்டார். ஒரு 100 ரூபாய் கேட்டோம். அதுவும் இல்லை என்று கூறிவிட்டார். ரேஷன் கடைக்காரரிடம் சென்று 5 கிலோ அரிசியாவது கொடுங்கள் என்று கேட்டோம். அவரும் தர மறுத்துவிட்டார். நாங்கள் எங்கு போவோம்?.

இவ்வாறு குட்டி கூறினார்.

இதுகுறித்து, அலிகர் மாவட்ட ஆட்சியர் சந்திர பூஷண் சிங் கூறும்போது, ‘‘குட்டி குடும்பத்தின ரிடம் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு எதுவும் இல்லை. இது ஆச்சரியமாக இருக்கிறது. இரண்டு கார்டுகளையும் பெறுவதற்கு குட்டி எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. எனினும், உதவி செய்யாத கிராம தலைவர், ரேஷன் கடைக்காரரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறோம். தற்போது, குட்டி குடும்பத்தினருக்கு ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு அந்தி யோதயா கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கும் ஆதார் கார்டும் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

ஆனால், ‘‘ரேஷன் கார்டு, ஆதார் கார்டு பெறுவதற்கு உள்ளூர் ஏஜென்ட்டிடம் சென் றேன். அதற்காக 350 ரூபாயும் கொடுத்தேன். ஆனால், என்னுடைய செல்போன் தொலைந்துவிட்டதால் மேற் கொண்டு உதவ முடியாது என்று ஏஜென்ட் கூறிவிட்டார். ஆதார் கார்டு பெறுவதற்கு செல்போன் எண் முக்கியம் என்று அவர் கூறினார். அதனால் 2 கார்டுகளையும் பெற முடியவில்லை’’ என்று குட்டி கூறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x