Last Updated : 18 Jun, 2021 03:14 AM

 

Published : 18 Jun 2021 03:14 AM
Last Updated : 18 Jun 2021 03:14 AM

தமிழக வன முகாம்களின் யானைகளுக்கு கரோனா வைரஸ் பரவும் ஆபத்து இல்லை: உ.பி.யின் ஐவிஆர்ஐ நிறுவன மருத்துவ ஆய்வில் தகவல்

கோப்புப் படம்

புதுடெல்லி

கரோனா இரண்டாவது அலையில் விலங்குகளும் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் ஒரு சிங்கம் கரோனா தொற்றால் உயிரிழந்தது.

இதனால், மற்ற விலங்குகளுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய தமிழக வனத்துறை முடிவு செய்தது. இதில் முதல்கட்டமாக, முதுமலை, ஆனைமலை, திருச்சி எம்.ஆர். பாளையம் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் உள்ள வளர்ப்பு யானைகளின் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, உ.பி.யின் பரேலியின் உள்ள இந்திய கால்நடை மருத்துவ ஆய்வு நிறுவனத்துக்கு (ஐவிஆர்ஐ) அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இங்கு வந்த சுமார் 50 யானைகளின் சளி மாதிரிகளை ஐவிஆர்ஐ விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

இதில், அந்த யானைகளுக்கு கரோனா தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. தாவர உண்ணிகள் இனமான யானைகளுக்கு கரோனா தொற்று பரவும் ஆபத்து இல்லை எனவும் அந்த அறிக்கையின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விரிவான மருத்துவ அறிக்கையும் தமிழக வனத்துறைக்கு ஐவிஆர்ஐ அனுப்பி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உ.பி.யின் பிஜ்னோர் மாவட்ட வன அதிகாரியும் தமிழருமான எம்.செம்மாறன் கூறும்போது, “மாமிசம் உண்ணும் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் மற்றும் குரங்குகளுக்கு மட்டுமே கரோனா ஆபத்து உள்ளது. தாவர உண்ணிகள் என்பதால் யானை, மான் போன்ற விலங்குகளுக்கு கரோனா தொற்றுக்கான வாய்ப்புகள் இல்லை. உடலில் சென்று ஒட்டிக் கொள்வதற்கான ரிசப்டாஸ் எனும் செல்கள் தாவர உண்ணிகளிடம் இல்லை” என்றார்.

இதனிடையே, ஜெய்ப்பூரின் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு சிங்கத்துக்கும் உத்தர பிரதேச மாநிலம் எட்டாவாவில் உள்ள சரணாலயத்தின் 2 சிங்கங்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. இது ஐவிஆர்ஐ நிறுவன பரிசோதனையில் உறுதியான பின் பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, குணம் அடைந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x