Published : 17 Jun 2021 04:45 PM
Last Updated : 17 Jun 2021 04:45 PM

3 மாதங்களாகியும் புதிய விதிமுறைகளை ட்விட்டர் பின்பற்றவில்லை: ரவிசங்கர் பிரசாத் கடும் தாக்கு

புதுடெல்லி

3 மாத கால அவகாசம் வழங்கிய போதிலும் ட்விட்டர் நிறுவனம் புதிய ஐடி விதிகளை பின்பற்றவில்லை என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய அரசு முன்பே அறிவித்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதில் ‘‘சமூக ஊடக நிறுவனங்கள் அதன்அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்களை வலைதளத்தில் வெளியிட வேண்டும்.

புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும் சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை பகிர்தல்’’ போன்ற விதிமுறைகள் உள்ளன.

இதற்கு ட்விட்டர் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனம் அறிவிக்கை வெளியிட்டு இருந்தது. இதற்கு மத்திய அரசு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது. புதிய விதிகளின் படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி கெடு வழங்கியது.

இதை ஏற்க ட்விட்டர் நிறுவனம் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் பெற்றுள்ள சட்டபாதுகாப்பு அந்தஸ்து விலகிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

ட்விட்டர் நிறுவனத்திற்கு 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கி விட்டோம். ஆனால் அந்த நிறுவனம் உரிய அதிகாரியை நியமிக்கவில்லை. புதிய ஐ.டி. சட்டத்தை பின்பற்றவில்லை.

கருத்து சுதந்திரத்தைத் தாங்கள் தான் தூக்கிப்பிடிப்பதாகக் கூறிக்கொள்ளும் ட்விட்டர் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறிகளைப் பின்பற்ற மறுப்பது ஆச்சரியமளிக்கிறது. மற்ற நிறுவனங்கள் விதிகளுக்கு உடன்பட்டிருக்கும் நிலையில் ட்விட்டர் மட்டும் அடம்பிடிக்கிறது.

பல சந்தர்ப்பங்களில் வாய்ப்புகள் கொடுத்தும் அவர்கள் விதிகளுக்கு உடன்படவில்லை. தகவல் தொழிநுட்ப சட்ட நெறிமுறை எண் 7-ஐ பின்பற்றவில்லை என்றால் விதி எண் 79-ன் கீழ் இந்தியாவில் சமூகவலைதளங்களுக்கு கிடைக்கும் சட்டரீதியிலான பாதுகாப்பை இழக்கும் சூழல் உருவாகும். நாட்டின் தண்டனை சட்டங்கள் மற்றும் பிற சட்டங்களுக்கு ட்விட்டர் நிறுவனம் உட்பட நேரிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x