Published : 17 Jun 2021 02:09 PM
Last Updated : 17 Jun 2021 02:09 PM

ஒரே ஆண்டில் ரூ.660 கோடிக்கு வாழைப்பழம் ஏற்றுமதி

புதுடெல்லி  

இந்தியாவில் கடந்த நிதியாண்டில் 660 கோடி ரூபாய் மதிப்பிலான வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
சர்வதேச தரத்திற்கு நிகரான வேளாண் செயல்முறைகளை பின்பற்றுவதால் இந்தியாவில் வாழைப்பழங்களின் ஏற்றுமதி தீவிரமாக அதிகரித்து வருகிறது.

மொத்த உற்பத்தியில் சுமார் 25 சதவீதத்துடன் உலகளவில் வாழைப்பழங்களின் உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, உத்தரப்பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நாட்டின் மொத்த வாழைப்பழ உற்பத்தியில் சுமார் 70 சதவீத பங்கு வகிக்கின்றன.

கடந்த 2018-19-ஆம் ஆண்டு ரூ.413 கோடி மதிப்பில் 1.34 இலட்சம் மெட்ரிக் டன் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், 2019-20-ஆம் ஆண்டில் ரூ. 660 கோடி மதிப்பில் 1.95 லட்சம் மெட்ரிக் டன்னாக ஏற்றுமதியின் எண்ணிக்கையும் மதிப்பும் உயர்ந்தது.

2020-21-ஆம் ஆண்டில் (ஏப்ரல்-பிப்ரவரி) ரூ. 619 கோடி மதிப்பில் 1.91 லட்சம் மெட்ரிக் டன் வாழைப்பழங்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

புவியியல் குறியீட்டுச் சான்றிதழ் பெற்ற வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் நார் மற்றும் தாதுச் சத்து நிறைந்த ‘ஜல்காவோன் வாழைப்பழம்’, துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

வேளாண் ஏற்றுமதி கொள்கையின் கீழ் மகாராஷ்டிராவின் ஜல்காவோன் மாவட்டத்தில் உள்ள தண்டல்வாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து புவியியல் குறியீட்டுச் சான்றிதழ் பெற்றுள்ள 22 மெட்ரிக் டன் ஜல்காவோன் வாழைப்பழம் பெறப்பட்டது.

ஜல்காவோனின் நிஸர்க்ராஜா க்ரிஷி விக்யான் கேந்திராவில் பதிவு செய்யப்பட்ட ஜல்காவோன் வாழைப்பழத்திற்கு கடந்த 2016-ஆம் ஆண்டு புவியியல் குறியீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x