Published : 17 Jun 2021 09:48 AM
Last Updated : 17 Jun 2021 09:48 AM

அறிவியல்பூர்வமான காரணங்களால் கோவிஷீல்டு டோஸ்களுக்கான இடைவெளி அதிகரிப்பு: சுகாதார அமைச்சகம்

புதுடெல்லி

அடினோவெக்டர் தடுப்பூசிகளின் இயங்குமுறை தொடர்பான அறிவியல்பூர்வமான காரணங்களின் அடிப்படையிலேயே கோவிஷீல்டு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

கோவிஷீல்டு தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை 6-8 வாரங்களில் இருந்து 12-16 வாரங்களாக அதிகரித்த முடிவு தொடர்பாக தொழில்நுட்ப நிபுணர்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக ஒரு சில ஊடக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடினோவெக்டர் தடுப்பூசிகளின் இயங்குமுறை தொடர்பான அறிவியல்பூர்வமான காரணங்களை அடிப்படையாகக் கொண்டே இடைவெளியை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து, கோவிட்-19 பணிக்குழு மற்றும் தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தொழில்நுட்ப நிலை உட்குழுவில் முழுவதும் விவாதிக்கப்பட்டதுடன், எந்த உறுப்பினரும் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கோவிட்- 19 பணிக்குழுவின் 22-வது கூட்டம் கடந்த மே 10-ஆம் தேதி நடைபெற்றது.

தேசிய தடுப்பு மருந்துக் கொள்கையின் கீழ் கோவிஷீல்டு டோஸ்களுக்கான இடைவெளியை மாற்றியமைக்கும் திட்ட முன்மொழிவை கோவிட்-19 பணிக்குழு ஏற்றுக்கொண்டது. ‘நிஜ வாழ்க்கையின் ஆதாரங்களை, குறிப்பாக இங்கிலாந்தில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை 12-16 வாரங்களாக அதிகரிக்க கோவிட்-19 பணிக்குழு சம்மதம் தெரிவிக்கிறது', என்று அக்குழு பரிந்துரைத்தது.

உயிரி தொழில்நுட்பத் துறைச் செயலாளர், மருத்துவ ஆராய்ச்சித் துறைச் செயலாளர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைமை இயக்குநர் ஆகியோர் தலைமையில் கடந்த மே 13-ஆம் தேதி நடைபெற்ற தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தொழில்நுட்ப நிலை உட்குழுவின் 31-வது கூட்டத்தில் கோவிட்-19 பணிக் குழுவின் பரிந்துரை கூடுதல் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தொழில்நுட்ப நிலை உட்குழு, கீழ்க்காணும் பரிந்துரையை அளித்தது:

கோவிட்-19 பணிக்குழுவின் பரிந்துரையின்படி, கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கு இடையே குறைந்தபட்சம் மூன்று மாத இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x