Published : 08 Dec 2015 09:04 AM
Last Updated : 08 Dec 2015 09:04 AM
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை தொடும் நிலையில் உள்ளதால் அணையின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசிடம் முறையிட கேரள அரசு முடிவு செய்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது முல்லை பெரியாறு அணை. இந்தப் பகுதியில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. எனவே, அணையின் நீர்மட்டம் தற்போது 141.8 அடியாக உள்ளது. விரைவில் 142 அடியை தொட்டுவிடும் நிலையில் உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு குறித்து கேரள அரசு அச்சம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் போராட்டத் துக்குப் பிறகு, முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் உத்தர விட்டது. அதன்பின், அந்தளவுக்கு தண்ணீர் தேக்கப்பட்டது.
இந்நிலையில் கேரள சட்டப் பேரவையில் நேற்று முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் கேள்வி எழுப்பினார். அவருக்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா கூறியதாவது:
அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. அணையை சுற்றியுள்ள மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க அரசு தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அணை கட்டப்பட்டு 112 ஆண்டுகள் ஆகின்றன. இந்த அணை தொடர்பாக தமிழகம் - கேரள மாநிலங்களுக்குள் பிரச்சினை நிலவுவதால், தற்போது நீர்மட்டம் உயர்ந்து வருவது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.
அணை மற்றும் அதை சுற்றியுள்ள மக்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசிடம் எடுத்துரைப்போம். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் உம்மன்சாண்டி பேசுவார்.
இவ்வாறு ரமேஷ் சென்னிதாலா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT