Published : 16 Jun 2021 09:32 AM
Last Updated : 16 Jun 2021 09:32 AM

சரக்கு வழித்தடத்தில் ராணுவ தளவாடங்கள்: இந்திய ராணுவத்தின் சோதனை முயற்சி வெற்றி

புதுடெல்லி

பாதுகாப்பு படைகளின் தயார்நிலையை அதிகரிக்க வழிவகுக்கும் முதல் நடவடிக்கையாக சரக்கு ரயில் வழித்தடத்தில் ராணுவ தளவாடங்களை ஏற்றிச் சென்று இந்திய ராணுவம் சோதித்து பார்த்தது.

சரக்குப் போக்குவரத்தை விரைவில் மேற்கொள்ள பிரத்தியேக சரக்கு வழித்தடத்தை இந்திய ரயில்வே சமீபத்தில் உருவாக்கியது. இந்த சரக்கு ரயில் வழித்தடத்தின் திறனை மதிப்பீடு செய்ய, நியூ ரெவாரியிலிருந்து, நியூ புலேரா வரை ராணுவ வாகனங்கள் மற்றும் தளவாடங்களை ரயிலில் ஏற்றி இந்திய ராணுவம் பரிசோதனை மேற்கொண்டது.

இது வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்திய ராணுவம், பிரத்யேக சரக்கு ரயில் வழித்தட கார்ப்பரேஷன், இந்திய ரயில்வே ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பின் மூலம் பாதுகாப்பு படைகளின் போக்குவரத்து திறன் அதிகரிக்கும்.

பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்து நிறுவனம், இந்திய ரயில்வே உட்பட அனைத்து தரப்பினருடன் இந்திய ராணுவம் மேற்கொண்ட பேச்சுவார்த்தை, பாதுகாப்பு படைகளின் போக்குவரத்தில், பிரத்தியேக சரக்கு ரயில் பாதை மற்றும் அதன் துணை கட்டமைப்பின் பயன்பாட்டை அதிகரிக்க உதவும்.

பாதுகாப்பு படைகளின் போக்குவரத்துக்கு உதவ சில இடங்களில் கட்டமைப்புகளை உருவாக்குவதும், ராணுவ ரயில் போக்குவரத்து சேவைகளுக்கான நெறிமுறைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பரிசோதனைகள், பாதுகாப்பு படைகளின் தயார்நிலையை அதிகரிக்க வழிவகுக்கும் முதல் நடவடிக்கை. இந்த முன்முயற்சி, திட்டமிடல் காலத்திலேயே, நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில், ராணுவத் தேவைகளும் இணைந்துள்ளதை உறுதி செய்வதற்கான நடைமுறையை ஏற்படுத்தும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x